நான் கட்டபொம்மன் -விடியோ

விடுமுறைப் பயணத்தில் சிக்கிய ஒரு கியூட் விடியோ.. உங்களுக்காக.!

அவன் பெயர் மீரா கதிரவன்

 

   சமீபத்தில் ஒரு நாள் கண்ணனிடம் இருந்து போன் வந்தது. மானேஜர் கூப்பிட்டாக்கூட 5 நிமிஷம் கழிச்சுப்போகலாம், இவன் கூப்பிட்டுப்போகலைன்னா டான்ஸ் ஆடிவிடுவான். வீட்டுக்குப்போனால் தாடி வைத்த ஒரு அழகான நபருடன் பேசிக்கொண்டிருந்தான். நான் போகவும் 'இவன்தான் பிரபல பிளாகர் ஆதி' என்று வேண்டுமென்றே 'பிரபல'வை அழுத்திச்சொல்லி அறிமுகம் செய்துவைத்தான். கடுப்பாகும் போதே அடுத்து 'இது யாருன்னு சொல்லு பாக்கலாம்' என்று கேள்வி வேறு. எனக்குப் பிடிக்காததையே செய்வதில் பரம திருப்தியடையும் இரண்டாவது நபர்.
ஹிஹி என்று நான் இளித்துக்கொண்டிருக்கும்போதே ரொம்ப சிரமம் வைக்காமல் 'நான் மீரா கதிரவன்' என்று சிரித்தார் அவர். அட, எத்தனை தடவை போனில் பேசியிருக்கிறோம் என்று பின்னர் சகஜமானேன். அவர் இதோ வரும் வெள்ளியன்று வெளியாகவிருக்கும் 'அவள் பெயர் தமிழரசி' படத்தின் இயக்குனர். அவர் கையில் ஒரு சிடி இருந்தது. ஆஹா.. படம் வெளியாகும் முன்பே பார்த்துவிடலாம், அதுவும் தியேட்டர் அலைச்சல், செலவு இல்லாமலேயே என்று நான் மகிழவும், 'முதல்ல படத்தை பார்த்துடலாம், அப்புறம் பேசுவோம்' என்று கண்ணன் சொல்லவும் ஆர்வமாகித்தலையாட்டினேன்.

   ஒரு அழகிய 5 நிமிடங்கள். அதற்குள் முடிந்துபோய்விட்டது. அதானே பார்த்தேன்.. பில்ட் அப் இல்லாமல் என்னைக்கு நாம் நினைத்தது நடந்திருக்கிறது.? அவர் கொண்டு வந்திருந்தது ட்ரெயிலர்தான். இவங்கள்லாம் படம் தியேட்டர்ல ரிலீஸாகுறதுக்கு முன்னால் லவ்வருக்குக்கூட படத்தைப் போட்டுக்காண்பிக்க மாட்டார்கள் போலிருக்கிறது. அவ்வளவு அழுத்தம். நிறைய பேசிக்கொண்டிருந்தோம். ஏற்கனவே இந்தப்படத்திற்காக படம் துவங்கப்படும் முன்பே முன்னால் மீரா எடுத்த இதே படத்துக்கான முன்னோட்டத்தைப் பார்த்திருக்கிறேன். 10 நிமிடங்கள் ஓடும் அதிலேயே பல ஆச்சரியங்கள் நிறைந்திருந்தன. ஒரு முன்னோட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்ட கடும் உழைப்பே என்னை வியக்கச்செய்தது. சினிமா எளிய வேலை அல்ல. மீரா ஒரு எழுத்தாளர், சிறுகதைகள் எழுதியிருக்கிறார். லோகித்தாஸிடம் நன்மதிப்பைப் பெற்றிருந்த அவரது அன்புக்குரிய சீடர்களில் முக்கியமானவர். பாலுமகேந்திராவின் நண்பர். அவரது பல படங்களின் திரைக்கதைப் புத்தகங்களை உருவாக்கியவர் மீராகதிரவனே.

meera

    சில வருடங்களுக்கு முன்னமே துவக்கப்பட்ட பிராஜக்ட் 'தமிழரசி'. சரியான நேரத்தில் பணிகள் நிறைவடைந்திருந்தால் நாம் பாராட்டிய பல படங்களுக்கு முந்தைய படமாக இது இருந்திருக்கும். படத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும் காதல், பயணம் குறித்து டிரெயிலரிலிருந்து முழுமையாக அறிந்துகொள்ளமுடியவில்லை எனினும் பெய்த அதிகாலை மழையின் ஈரம் காயாமலேயே திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு கிராமத்தை உயிர்த்தன்மையோடு திரையில் மொழிபெயர்த்திருப்பார் என்பது மட்டும் நிச்சயம். இலக்கியப்பரிச்சயமும், தொடர்பங்களிப்பும், இயல்பு சினிமாவின் மீதான நம்பிக்கையும் கொண்டவர்களின் வரவு மகிழ்வான சேதி. நாடோடிகள், பசங்க.. போன்ற வெற்றிப்படங்களின் வரிசையில் இந்தப்படமும் இடம்பெறவேண்டும் என்பது நம் ஆசை. அப்போதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நிகழும் இயல்பான சினிமாக்களின் வரவு பெருகி ஆரோக்கியமான சூழல் உருவாகும்.

  தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்கயிலாத இடத்தைப்பெற மீரா கதிரவனுக்கு நம் வாழ்த்துகள்.

தமிழரசியின் இசை குறித்து நண்பர் கார்க்கியின் ஒரு பதிவைக் காணுங்கள்.

"படத்தில் பங்குபெற்ற கலைஞர்களின் பேட்டிகள் மற்றும் படம் குறித்த தகவல்களுக்கு படத்திற்கான இந்த பிரத்யேக வலைப்பூவுக்கு செல்லுங்கள்”

பி.கு : படத்தின் தலைப்பு கேப்ஷனுடன் 'அவள் பெயர் தமிழரசி, வயது 18 மாநிறம்'. கிளம்புகையில் கண்ணன் கேட்டான், "அடுத்து நாம ஒரு குறும்படம் எடுக்கலாமாடா? பெயர் கூட முடிவு பண்ணிட்டேன்.. 'அவன் பெயர் தாமிரா, வயது 34 கொஞ்சம் தொப்பை'.."

விண்ணைத்தாண்டி வருவாயா -விமர்சனம்

 

vinnaithandi varuvaya Pictures, vinnaithandi varuvaya Picture Gallery, vinnaithandi varuvaya, Hot vinnaithandi varuvaya Photos, vinnaithandi varuvaya Images 

  ஒரு அழகான காதல்கதை என்பதைவிடவும் காட்சிப்படுத்தப்பட்ட ஒரு அழகான காதல் எனலாம்.  டுப்பு டுப்புஎனும் துப்பாக்கிச் சத்தமில்லாமல் கௌதமின் முதல் படம் என்று நினைக்கிறேன். கௌதம் படம் என்பதால் எந்தநிமிடமும் சிம்பு துப்பாக்கியை எடுத்துவிடுவாரோ என்று பயந்துகொண்டேயிருந்தேன்.எந்த கமர்ஷியல் கோமாளித்தனங்களும் இல்லாத அழகிய காரெக்டரில் சிலம்பரசன், நிறைவு. அப்படியும் 10 பேரை ஒரே குத்தில் வீழ்த்தும் சண்டைக்காட்சி இருக்கிறது. அது கமர்ஷியலில் வராதா என்றேல்லாம் கேட்கக்கூடாது.அதெல்லாம் டிஃபால்ட். (என்னதான் சிம்பு நிறைவாக செய்திருந்தாலும் இந்த காரெக்டருக்கு தனுஷ் இன்னும் பொருத்தமாக இருந்திருப்பாரோ என எண்ணிக்கொண்டே வெளியே வந்தேன்).

திரிஷா ஏற்கனவே என் ஃபேவரிட் என்பதால் மட்டுமல்ல படம் முழுக்க ரசனையான கோணங்களில் அவர் நிறைந்திருப்பது பர்சனலாக எனக்கு ஆக திருப்தி.

இரண்டு அழகான, மெச்சூர்டான நபர்களுக்கிடையே காதல். மெச்சூர்ட் என சொல்லியாகிவிட்டது. அவர்கள் எப்படி, வீடு எப்படி, சூழல் எப்படி என்பதெல்லாம் புரிந்த அதையும் மீறி காதலை வளர்த்தெடுத்த ஜோடி என்றுசொல்லியாகிவிட்டது. அப்புறம் அவர்களுக்கிடையில் பிரச்சினை வரவேண்டுமே.. என்ன செய்யலாம்.?எந்தக்காரணமும் இல்லாமல் திரிஷா சொந்தமாக ஏதேதோ திங்க் பண்ணி இந்தக்காதல் சரிப்படாது என்று சொல்லிசிம்புவுக்கு பல்பு கொடுத்துவிட்டு போய்விடுகிறார். என்னாங்கடா இது என்கிறீர்களா? அப்படித்தான் தோன்றியது எனக்கும். ஒருவேளை பெண்கள் இப்படித்தான் லுச்சாத்தனமாக நடந்து கொள்வார்கள் என இயக்குனர் சொல்கிறாரோ என்னவோ? ஹிஹி.. அதற்கும் கொஞ்சம் தைரியம் வேண்டும்தான். அப்புறம் என்னாச்சுன்னு தெரிஞ்சுக்க எதுக்கும் ஒருவாட்டி படம் பார்த்துடுங்க.

சஸ்பென்சை உடைப்பதாக இருந்தாலும் வேறு வழியில்லை, ஒரு விஷயத்தைச் சொல்லியே ஆகவேண்டும்.முன்பெல்லாம் படங்களில் ஹீரோவை ஏமாற்ற ஹீரோயினின் அப்பா அவருக்கு கல்யாணம் ஆகிவிட்டதுஎன்று சொல்லி விட அதை நம்பி ஹீரோவும் ஏமாந்து சோகமாகித் திரிவார். நாமும் அடடா, வட போச்சே.. கதை அடுத்து எப்படி போகப்போகுது, வேறு ஹீரோயின் யாராவது வருவாங்களா என்று ஆவலோடு இருப்போம். கிளைமாக்ஸில்தான் ஹீரோயினுக்கு கல்யாணம் ஆகவில்லை என்ற உண்மை தெரியும்.அப்பா பொய் சொல்லியிருக்கிறார் என்று லாஜிக் சொல்லிவிடுவார்கள்.

இந்தப் படத்திலும் விசாரித்துவிட்டு வந்த ஹீரோவின் தங்கை, ‘அவர் அப்பாவிடம் விசாரித்தேன். கல்யாண ஆல்பமெல்லாம் பார்த்தேன், ஹீரோயினுக்கு கல்யாணம் ஆகிவிட்டது’ என்று சொல்லிவிடுகிறார். ஹீரோவுடன் சேர்ந்து நாமும் அடடா, வட போச்சே என்று மேற்சொன்னது போல கிளைமாக்ஸ் வரை சுற்றிக்கொண்டிருக்க, கிளைமாக்ஸில் வந்து ஹீரோயின் ஹிஹி எனக்கு கல்யாணம் ஆகவில்லை என்கிறார். அப்புறம் அந்தக் கல்யாண ஆல்பம் என்ன ஆயிற்று.? அப்பாவைப்போல ஹீரோவின் தங்கையும் பொய் சொல்லியிருக்கிறார் என்று வைத்துக் கொள்ளவேண்டியதுதான். வேற வழி? இனி வருங்காலங்களில் கல்யாண ஆல்பம், வீடியோ, பிரக்னென்ஸி செக்கப்எ ல்லாம் காண்பித்துவிட்டு கடைசியில் ஹிஹி ஹீரோயினுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை.. அப்பா,தங்கை, வீடியோகிராஃபர், வாட்ச்மேன், லேடிடாக்டர் எல்லோருமா சேர்ந்து பொய் சொல்லியிருக்காங்க என்று சொல்லிவிடுவார்கள் என நினைக்கிறேன். பல்பு வாங்குவது நமக்கெல்லாம் புதிதா என்ன.?

பளீரிடும் வண்ணங்கள் இல்லாமல் பசுமை, வான்நீலம் என படம் முழுதுமே மென்மையான டோனில் அழகு ததும்ப படமாகியிருக்கிறது. முக்கால்வாசிப் படம் வரை வரும் அழகான காதல் காட்சிகளுக்காகவும், ஒரு அழகிய விஷுவல் ட்ரீட்டுக்காகவும் நன்றி கௌதம் மேனன்.!

பிற்சேர்க்கை :
படத்தின் முடிவு குறித்த குழப்பத்துடனே இந்த விமர்சனப்பதிவு அமைந்துள்ளது என்பதை அறியமுடிகிறது. நான் பார்த்த திரையரங்கில் குறித்த சில நிமிடங்கள் கட் செய்யப்பட்டதாகவே என்னால் முடிவுக்கு வரவேண்டியதிருக்கிறது. மீண்டும் மீண்டும் வேறு வேறு திரையரங்குகளில் பார்த்து உண்மைநிலையை அறிந்து அறிவை வளர்த்துக்கொள்வது ரொம்ப அவசியம்.. என்பதால் பார்த்துவிட்டு முடிந்தால் பின்னர் அப்டேட் செய்கிறேன்.. ஹிஹி. திரிஷா திருமணம் செய்துகொண்டாரா (அட படத்தில்ங்க..) இல்லையா என்பது குறித்த குறிப்பிட்ட இரண்டு பாராக்களையும் இந்தப்படத்துக்குரியதாக கருதாமல் பொதுவான தமிழ்ப்படங்கள் குறித்த ஒரு ஜோக்காக கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். சுபம்.!

அண்ணன்

அண்ணனுக்கு இந்த விஷயம் தெரிந்துவிட்டது, வீட்டுக்கு வந்துகொண்டிருக்கிறான், அப்பா கூட்டிவரச்சொன்னார் என்று மூர்த்தி சொன்னபோது கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டேன். எப்படி சமாளிக்கப்போகிறேன்? வீட்டுக்குப் போகாமல் இப்படியே எங்காவது ஓடிப்போய்விடலாமா என்று கூட தோன்றியது. அப்பாவை சமாளிப்பதே பெரிய விஷயம். இந்த அழகில் அண்ணனை எப்படி சமாளிப்பது? அவன் முன்னால் நிற்பதே ஆகாத காரியம். அவன் கண்களைச் சந்திப்பதைவிட கொம்பு சீவிய அடங்காத காளையின் முன் நிற்பது எளிது. ஒரே அயர்ச்சியாக இருந்தது.

“எப்படிரா அவனுக்கு தெரிஞ்சுது?”

“அப்பா காதுக்கு விசியம் போனதுமே முத வேலையா அவரு பண்ணுனதே அவனுக்கு போன் பண்ணிச்சொன்னதுதான்”

நானும் மூர்த்தியும் நின்றுகொண்டிருந்தது சேரன்மகாதேவி தாமிரபரணி ஆற்றங்கரையில் ரயில்வே பாலத்தின் அடிப்புறம். மூர்த்தி என் தம்பி. இங்கிருந்து சிறிது தூரத்தில்தான் எங்கள் வாழை வயல் இருந்தது. அங்கு தண்ணீர் பாய்ச்ச வந்தவனிடம்தான் மூர்த்தி வந்து இந்த விஷயத்தைக்கூறினான். ஆசுவாசமாக உட்கார்ந்து பேசத்தான் இந்த பாலத்துக்கு அடியில் வந்து உட்கார்ந்திருக்கிறோம். எப்படியும் இது போல ஒரு சூழல் ஏற்படத்தான் போகிறது என்பது எதிர்பார்த்ததுதான். ஆனால் இவ்வளவு சீக்கிரம் அதுவும் இப்படி திடுமென‌ எதிர்பார்க்கவில்லை. எப்படி யோசித்தும் என்ன செய்வது என்று ஒன்றும் புலப்படவில்லை.

எப்போதுமே பிரச்சினைகளுக்கு எதிராக ஒரே ஒரு தீர்வுதான் இருக்கிறது. அது அதை எதிர்கொண்டுவிடுவதுதான் என்று எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது.

“வீட்டுக்கு போயிர‌லாமாடா?”

“செருப்பால அடிப்பான்”

“ஏண்டா நீ வேற.. நானே என்ன பண்ணுத‌துன்னு பயந்துபோயிருக்கேன்.. பீடி சிகரெட் ஏதாவது வச்சிருக்கியா?”

அவன் குடிப்பது எனக்கும் நான் குடிப்பது அவனுக்கும் தெரியும் என்றாலும் நேருக்கு நேராக இப்படிக்கேட்பேன் என்று எதிர்பாராததால் மூர்த்தி முதலில் ஆச்சரியமாகி பின் தயக்கத்துடனே தன்னிடமிருந்த சிகரெட்டைத் தந்தான். அதைப்பற்றவைத்துக்கொண்டே இந்த பிரச்சினைக்கிடையிலும் விளையாட்டாய்,

“இதுக்கே ஒரு நா அவன்கிட்ட போட்டுக்குடுக்கணும்டா உன்னிய‌” என்றேன்.

“மொதல்ல உம் பிரச்சினைய‌ பாரு ராசா.. அப்புறம் பாக்கலாம் என்னிய‌..”

“யார்றா போட்டுக்குடுத்தது? எப்படிரா தெரிஞ்சுது?”

“தேசிங் சார் பார்த்திருக்காரு. சேர்மாதேவி பஸ்ஸ்டாண்ட்ல.. நேத்து.”

காயத்ரி.

காயத்ரி மனதில் வந்தாள். எப்படி நிகழ்ந்தது இது? அழகில் மயங்கித்தான் அவள் பின் சுற்றத்துவங்கினேன். அவள் அழகி மட்டும்தானா? தேவதை. இந்த கரடுமுரடான குடும்பத்துக்குள் காயத்ரியை கொண்டு வந்து ஒரு வீணை போல வைக்கவேண்டும். வைத்துவிட்டால் பின்னர் அப்பா, அம்மா அனைவரும் அந்த அதிர்வை உணர்ந்துதான் தீரவேண்டும். நிச்சயம் அவள் வருகையின் அற்புதத்தை உணர்வார்கள் அனைவரும். ஆனால் கொண்டு வருவது எப்படி? இது சாத்தியமா? இதை நிகழ்த்த முடியுமா?

முடிந்தாகவேண்டும். நிகழ வேண்டும். வெண்ணை போன்ற காயத்ரியின் தேகம் இந்த கருத்த தேகத்தை ஏற்றதை அனைவரும் அறியச்செய்யவேண்டும். காதலை மனதில் எழுதினால் அழகு. உடலில் எழுதினால் பேரழகு.!

"போயிராலாம்டா. வேற என்னதான் பண்ணுதது. என்ன பண்றாங்கன்னு பாத்துருவ‌ம்"

"என்னிய மாட்டிவிட்டுறாத. கேட்டா எனக்கே இப்பதான் தெரியும்னுருவேன், சரியா?"

சொல்லிவிட்டேனே தவிர மனம் கிடந்து அடித்துக்கொண்டது. வீட்டில் காத்துக்கொண்டிருப்பது அப்பா மற்றும் அண்ண‌ன். அண்ணன் என்றால் எங்கள் பெரியப்பா மகன். ஆனால் ஆலமரமாய் விரிந்து கிட‌க்கும் குடும்பங்களுக்கு அவன் மூத்த வாரிசு. அப்பா, பெரியப்பாக்களை விடவும் அவன் சொல்லே வேதம் எங்கள் குடும்பங்களுக்கு. அவனுக்கே எங்கும் முதல் மரியாதை. அதற்குத் தகுதியான ஆள்தான் அவன். அத்தனை பேர் மீதும் அவ்வளவு பாசம் வைத்திருப்பவன். அத்தனை தம்பி தங்கைகளில் இதுவரை அதிகம் படித்தவன். படித்தும் வேறு வேலைகளுக்குப் போக மனமில்லாமல் இயற்கை விவசாயத்தில் ஆர்வமாகி இன்று, வயலிலேயே கிடந்து வளர்ந்த எங்களைவிடவும் சிறப்பாக வயல்களையும், தோட்டங்களையும் பார்த்துக்கொண்டிருக்கிறான். ஊரிலும் நல்ல பெயர். விவசாயம் சார்ந்த, மற்றும் பிற‌ தொழில் செய்வோர் இவனது ஆலோசனை கேளாமல் ஏதும் செய்வதில்லை. அவ்வளவு அன்பானவன், ஆனால் கோபம் வந்தாலோ.. போச்சு.! அவனுக்கே இன்னும் கல்யாணமாகவில்லை. இந்த அழகில் இன்னும் இரண்டு வருடம் மறைத்து வைக்கலாம் என்று எண்ணிய என் கதை இதோ வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. என் உடன்பிறந்தவர்களே மூர்த்தியையும் சேர்த்து நான்கு பேர். அதில் இரண்டாமவள், எனக்கு இளையவள் கல்யாண வயதில் காத்திருக்கிறாள்.

வீட்டை நெருங்கியிருந்தோம். என் படபடப்பு இன்னும் ஏகத்துக்கு எகிறியிருந்தது. தெருவிலிருந்த வேலிக்கதவை ஓசைப்படாமல் திற‌ந்து இருவரும் உள்நுழைந்தோம். செம்பருத்திச் செடிக்கருகில் அவனது பைக் நின்றிருந்தது. ஒற்றை வாசல்கதவு முழுதும் மூடப்படாமலிருந்தது. முன்னறையில்தான் அப்பாவுடன் பேசிக்கொண்டிருக்கிறான். அம்மாவின் குரல் கேட்டது. இப்போதுதான் வந்திருக்கிறான் போலிருக்கிறது. உன்னிப்பாக கேட்டேன்.

"யய்யா, காப்பி போடவா?"

"அம்மா, நா திருநவேலிக்கு பேயிட்டு வர்ற வழிக்கி நேரா வாறேன் இங்க.. இன்னும் சாப்பிடல, இருக்க சோத்தப்போடுங்க.."

"புளிக்கொழம்புதான வச்சிருக்கேன், செத்த இருக்கியா.. இவள இந்தக்கோழிய அடிக்கச்சொல்லுதேன்"

"அதெல்லாம் ஒண்ணும் வேணாம்மா, இருக்கத வைங்க.. சித்தப்பா நீங்க சாப்பிட்டிய‌ளா, எங்கூட உக்காருதியளா? உக்காருங்க, அந்தப்பய வரட்டும் நாங்கேக்கேன். நீங்க முதல்ல சாப்பிடுங்க.. அப்புறம் பேசிக்குவம்"

சாப்பிட உட்கார்ந்திருக்கிறான். மூர்த்தியை மறித்தேன்.

"கொஞ்சதேரம் கழிச்சு போலாம்டா, சாப்பிட உக்காந்துட்டான்"

அப்படியே சத்தமிடாமல் வாசலுக்கு வந்து சுடலை கடைக்குச்சென்று இருந்துவிட்டு ஒரு அரைமணி நேரம் கழித்து வீட்டுக்குச்சென்றோம். உள்ளே நுழைந்ததுமே தெரிந்தது நடுவீட்டில் அப்பா சேரில் உட்கார்ந்திருக்க அருகே தூணில் சாய்ந்தபடி தரையில் உட்கார்ந்திருந்தான். இருவரையும் பார்க்க தயங்கியபடியே உள்நுழைந்தேன். பின்னாலயே மூர்த்தி நுழைந்தான்.

"வாண்ணே"

"ஆமாடே"

பின் பேச வார்த்தைகளில்லாமல் அனைவரும் தயங்கியபடியே சில நிமிடங்கள் கழிய, மூர்த்தி அடுத்த அறைக்கு நழுவினான்.

"அப்பா என்னுமோ சொல்லுது.. என்னடே விசியம், நெசந்தனா?" நேரடியாக கேட்டுவிட்டான். குரலில் இருந்து அவன் கோபத்திலிருக்கிறானா என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

தயங்கியபடியே, "என்னண்ண.. வி..சி..ய..ம்?"

"என்னடே மழுப்புத?"

அப்பா கோபமாக கத்தினார், "பெரிதம்பி, கண்டதுண்டமா வெட்டிப்போட்டுருவேன் சொல்லிரு.. கண்ட செறுக்கியவும் இந்த வீட்டுக்குள்ள கொண்டுவந்துருலாம்னு மட்டும் கனவு கண்டுக்கிட்டு இருக்க வேண்டாம். அப்பிடியெதுவும் கேக்கல, வீட்டவிட்டு அடிச்சுப்பத்திருவேன்.. சொல்லிட்டேன்"

"இருங்கப்பா, அதெல்லாம் கேப்பான்.. நாஞ்சொல்லுதன்"

மற்ற நேரம் என்றால் ஏதாவது எதிர்பேச்சு பேசியிருப்பேன். இவன் இருக்கும்போது பேச முடியாது. பெரியவங்களை எதிர்த்துப் பேசினால் கடும் கோபமாகிவிடுவான். அமைதியாக இருந்தேன். மூர்த்தியும் அவனுக்குப் பின்னால் வந்து நின்றுகொண்டான்.

"என்னடே சொல்லுத? இதெல்லாம் ஆவாதுன்னு தெரியாதா ஒனக்கு. அடுத்து இந்தப்பிள்ளைக்கு மாப்ள பாக்கணும். நல்லாருக்கா நீ பண்றது?"

ஆரம்பித்தேன், மெதுவாக ஆனால் உறுதியாக, "இல்லண்ண.. ஒனக்கே தெரியும், ஊரு ஒலகத்துல என்ன நடந்துகிட்டிருக்குன்னு. மொதல்ல ஒங்கல்யாணமும், தங்கச்சி கல்யாணமும் முடியட்டும்னு பாத்தேன். அதுக்குள்ள‌ தெரிஞ்சிபோச்சி"

அப்பா சேரைவிட்டு ஆத்திரமாக எழுந்தார். அவரை கையைப்பிடித்து அமரச்செய்து விட்டு என்னை நோக்கி கத்தினான்,

"சொன்னா கேட்கமாட்ட? பிச்சுப்புடுவன் ர‌ஸ்கல்.." என்றவாறே அப்பாவிடம் திரும்பினான்,

"இல்லப்பா, இது சொல்பேச்சு கேக்குறமாதிரி தெரியலை.. எங்கியாவது இழுத்துட்டுப்போயி கேவலப்படுத்துறதுக்கு மின்னால நம்மளே ஒத்துக்கிடவேண்டியதுதான். நெறைய பாத்தாச்சு.. இப்ப ஊருக்கு ஊரு இதான் நடந்துகிட்டுருக்கு, நாம என்னதான் கழுதயா கத்தி தொண்டத்தண்ணி வத்துனாலும் கடசில ஒண்ணும் ஆவாது. இவுனுவ அனுவவப்படாம திருந்தமாட்டானுவ. என்ன பண்ணச்சொல்லுதிய? இன்னமயும் சாதிய கட்டிக்கிட்டு அழுது என்ன பண்ணப்போறம்? நம்ம குடும்பத்தயே எடுத்துக்கங்க‌ சத்திவேலு தாத்தாவுந்தான் முப்பது வருசத்துக்கு முன்னயே பண்ணினாரு, நீங்க சொல்லித்தான் ஆச்சியப்பத்தி எங்குளுக்கே தெரியும். இப்ப என்ன ஆயிப்போச்சு? அதோட விதய மாத்திப்போட்டாத்தாம்ப்பா பயிர் நல்லாருக்கும்.."

இப்படி திடுமென எனக்கு ஆதரவாக பேசுவான் என எதிர்பாராமல் அப்பா அதிர்ச்சியடைய, நான் உள்ளூர குதூகலிக்க.. எங்களை நோக்கி திரும்பி,

"பேசிக்கிட்டிருக்கம்ல.. போங்கடா வெளில, அவன கூட்டுட்டு போடா.."

மூர்த்தியும், நானும் வெளியேறுவதைப்போல வாசல் கத‌வுக்குப்பின்னால் பம்மினோம். உள்ளே காதுகொடுத்தோம். அப்பாவிடம் தொடர்ந்துகொண்டிருந்தான்.

"என்ன பண்ணச்சொல்லுதிய? இந்தக்கதயில மட்டும் ஒண்ணும் பண்ணமுடியாது. ஒருத்தனும் கேக்கமாட்டான். ஒங்க காலமெல்லாம் வேற.. மெதுவா யோசிச்சுப்பாருங்க. நா சாந்திரம் அப்பாகிட்ட பேசிட்டு நாளைக்கு வாறேன். அடுத்தா என்ன பண்ணலாம்னு யோசிப்போம்.. என்னக்கேட்டா தங்கத்துக்கு வயசு இருவதுதான் ஆவுது. இந்தப்பயலுக்குதான் 25 ஆவுதே, எதுக்கு வெயிட் பண்ணுனும்? எனக்கு ஒண்ணும் அவசரமில்ல இருவத்தெட்டுதான ஆவுது. அடுத்த வருசம் பாக்கலாம். ஊரு ஒலகத்துல நடக்காததா?"

அப்பா சிலையாகியிருக்க தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான். நான் மனம் பறக்க ஜிவ்வென உணர்ந்தேன். இனிமேல் யாராலும் ஒன்றும் பண்ணமுடியாது.

சற்று நேரத்துல வெளியே வந்தவன் என்னிடம்,

"கொஞ்சம் பொறுங்கப்பா.. பேசுதேன். அதுக்குள்ள நாலுவேரு கண்ணுகாங்க சுத்துதமாதி தெரிஞ்சுது தொலைச்சுப்புடுவன்" என்றவாறே பைக்கை நோக்கி கிளம்பியவன், மூர்த்தியிடம் திரும்பினான்.

"இன்னோரு தடவ சீரெட் குடிக்கத பாத்தேன், வாயில சூடு வச்சிருவன் பாத்துக்க.." நிஜமான கோபம் தெறித்தது.

.

துரத்தும் துரதிருஷ்டம்

அதிர்ஷ்டம் ஒருவரைத் துரத்திச்சென்று அடைகிறதோ இல்லையோ, துரதிருஷ்டம் மட்டும் இலக்கை அடையாமல் விடுவதில்லை என நினைக்கிறேன்.

கம்ப்யூட்டர் ரிப்பேர் சரி செய்த மறுநாளே நெட் வேலை செய்யவில்லை. கால் புக் பண்ணிவிட்டு சும்மா உட்கார்ந்திருக்கலாம் நான். கையை வைத்துக்கொண்டு எங்கே சும்மா இருக்கமுடிகிறது? மூன்று நாள் ஆகியும் இன்னும் ஒரு நாதியைக்காணோம், இதை முன்பே எதிர்பார்த்து பக்கத்து வீட்டு கனெக்ஷனில் மோடம் வேலை செய்கிறதா என பார்க்கும் ஆவலில் அவர்கள் வீட்டிலிருந்த இணைப்பில் மாட்டினேன். டுப்பென்ற சத்தத்துடன் பக்திமணம் கமழ ஒரே நேரத்தில் நான்கு பத்திகளை கொளுத்தியதைப்போல புகை எழும்பியது. அந்தச்சின்ன மோடத்திலிருந்துதான் எவ்வளவு புகை? அவர்கள் வீட்டிலிருந்தது வோல்டேஜ் வித்தியாசம் கொண்ட பவர் கனெக்டர் போலிருக்கிறது. இப்போது BSNL ஆள் வந்து கேட்டால் என்ன சொல்வது என தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறேன்.

அது ஒரு பக்கம் இருக்கட்டும் என்றால் ஞாயிற்றுக்கிழமை எப்படி பொழுது ஓட்டுவது? ரமா இருந்தாலாவது சுமாரான சுபமாகவாவது பொழுது கழியும். இப்போது என்ன பண்ணலாம்? பார்க்கவேண்டியிருந்த சில டிவிடிக்களை எடுத்து வைத்துக்கொண்டு ஒன்றை கம்ப்யூட்டருக்குள் திணித்தால் 'ஹிஹி.. எனக்கு டிகோடிங் பண்ணத்தெரியவில்லை' என்று அது பல்லிளித்தது. முந்தின நாள் வந்து போன கம்ப்யூட்டர் பிரகஸ்பதி இந்த அழகில் வேலை செய்து வைத்திருக்கிறது.

கடுப்பாகி விட்டு டிவியை ஆன் செய்யலாம் என ரிமோட்டை எடுத்தால்.. நம்புங்கள் அது கை தவறி கீழே விழுந்தது. எதுவும் உடைந்தது போல தெரியவில்லை, ஆனால் வேலை செய்யவில்லை. இது ஏதோ உள்நாட்டு சதி, ஊஹூம் இதற்கெல்லாம் அசரக்கூடாது என முடிவு செய்து பொங்கிவந்த அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு (ரமா இல்லாத நாளில் கூட கடைக்குப் போக நேர்ந்தால்) தாம்பரத்துக்குக் கிளம்பினேன்.

அலைந்து திரிந்து அதே மாடல் ரிமோட்டை வாங்கிக்கொண்டு திரும்பினேன். ஞாபகமாக பழைய ரிமோட்டில் இருந்து பாட்டிரிகளைப் போட்டு முயற்சித்தால் நம்புங்கள் அதுவும் வேலை செய்யவில்லை. திடீரென ஞானம் வந்தது. ஒருவேளை பாட்டிரி தீர்ந்திருந்தால்.. இல்லையே இப்படி திடுமென தீராதே.! கையை நீட்டி, எக்கி, தலைகீழாக நின்று, பக்கத்தில் டிவியுடன் ஒட்டிவைத்து என பல பிரயத்தனங்களுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பாட்டிரி தீரும். இருப்பினும் சந்தேகத்தின் பலனை பாட்டிரிக்கு வழங்கி மீண்டும் கடைக்குப் போய்விட்டு திரும்பினால் அப்போதும் டிவி பல்லைக் காட்டியது. அப்போதுதான் உறைக்கிறது இந்த டெக்னிகல் மண்டைக்கு, டிவியின் சிக்னல் ரிஸீவரில் கோளாறு.

மீண்டும் ஒரு கால் புக் பண்ணிவிட்டு டிவியில் இருக்கும் பட்டன்களால் இயக்கி படம் பார்த்துவிடுவது என்று முடிவு செய்தேன். ஒரே நிமிடம்தான். எல்லாம் முடிந்தது. மெனுவை அழுத்தினால் சானல் ரிவர்ஸில் சென்றது, சானல் அப் செய்தால் மெனு வந்தது. சவுன்ட்டைக் குறைத்தால் கூடியது. கூட்டினால் இன்னும் கூடியது.. ஏதோ ஹிந்திச்சானலில் வீடே அலற டப்பென்று மெயினை ஆஃப் செய்துவிட்டு உட்கார்ந்தேன்.

ஏதாவது சினிமாவுக்குப்போய்விட வேண்டியதுதான். பேப்பரை எடுத்தேன். ஊஹூம் ஒன்றும் வேலைக்காகவில்லை. பாவனா மனதில் வந்து அசலுக்குப் போகலாமா என்று ஒரு கணம் தோன்றியது. அடுத்த கணமே டிவி விளம்பரங்களில் வந்த குண்டு குண்டான ஆட்களும் (இரண்டு அஜித், சம்பத், சுரேஷ், பிரபு, இன்னும் பலர்) அவர்களின் மண்டைகளும், டிஸைனர் தாடிகளும் நினைவுக்கு வந்து அந்த எண்ணத்தை அடியோடு ரப்பர் வைத்து அழித்தேன். என்னதான் பண்ணுவது? துரதிருஷ்டம் பயங்கரமானது, கேபிளின் புத்தகத்தைக் கையிலெடுத்தேன்.

.