என்னாச்சு.. குறும்படமே நம்மக்கிட்ட சிக்கிக்கிட்டு குண்டாங்குதிரையாக பட்டுக்கொண்டிருக்கிறது.. இந்த அழகில் ஆவணப்படம் வேறேயா.? என்று அதிர்ச்சியடைய வேண்டாம் தோழர்களே. காலத்தின் கட்டாயம்.. நாம் அடுத்த கட்டத்துக்கு நகரவேண்டிய அவசியத்தில் உள்ளோம். ஆகவே இது வரை யாரும் பேசத்துணியாத இந்தப் பொருளில் இந்த அதிமுக்கியமான ஆவணப்படத்தை எடுக்கும் சூழல் எனக்குக் வாய்த்தமைக்கு நான் பெருமை கொள்கிறேன்.

பின்விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்பதால் படத்தைப்பற்றிய மேற்குறிப்புகளோ,

படத்தில் வரும் ஆயுதம் எப்படி, யாரால் செய்யப்பட்டது என்பது பற்றிய மேல் தகவல்களோ..

சொல்லமுடியாத நிலையில் நாம் இருக்கிறோம். மேலும் இந்தப்படத்திற்கு பெண்கள் பக்கத்திலிருந்து கடும் எதிர்ப்பு வரலாம். உண்மையை உரக்கக்கூற வேண்டிய கடமையும் நமக்கிருப்பதால் அதற்கெல்லாம் கவலைப்பட நமக்கு நேரமில்லை.. இனி,

video

.


ist2_7730636-woman-wearing-white-dress-with-wings

அப்போது அவர்கள் வெண்மை நிற உடைகளை அணிந்திருக்கவில்லை

பின்புறத் தோள்களில் இறக்கைகளும் கூட இருக்கவில்லை

ரத்தம் சொட்டும் பற்களுடன்

இரையின் சுவையை சிலாகித்தபடி

அவர்கள் பேசிக்கொண்டிருந்த ஒரு தருணத்தில்தான்

நாம் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு

வேறு வேறு திசையில் பயணித்துக்கொண்டிருந்தோம்.!

.

சில வருடங்களுக்கு முன்னால் தென்காசி அருகேயுள்ள புகழ்மிக்க ஒரு உடல் ஊனமுற்றோருக்கான மறுவாழ்வு மையமொன்றில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அதன் நிறுவனர் என் வாழ்க்கையில் நான் மிக மதிக்கும் ஒரு மாமனிதர். அவர் ஒரு விபத்தில் அபூர்வத்திலும் அபூர்வமான பிரச்சினையான ஸ்பைனல்கார்ட் பாதிக்கப்பட்டவர் ஆவார். (ஹேராம் படத்தில் அதுல் குல்கர்னி குதிரை விளையாட்டு விபத்தில் இப்படியான உடற்பாதிப்புக்கு ஆளாவார்). அவரது அன்பைப் பெற்ற வகையிலும் நான் ஒரு அதிர்ஷ்டசாலியே.


அங்கே நான் ஏற்றுக்கொண்டிருந்த பணி, அப்போது முழுமையான இயக்கத்தில் இல்லாதிருந்ததால் பெரும்பாலான சமயத்தில் மற்ற பொதுவான வேலைகளைச் செய்துகொண்டிருப்பேன். அங்கே எட்டாம் வகுப்பு வரையிலான ஒரு பள்ளிக்கூடமும் போலியோ மற்றும் இதர நோய்களினால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சிக் கூடங்களும், பிற வேலைகளும் நடந்துகொண்டிருந்தன. தொழிற்கூடங்கள் மட்டுமின்றி பள்ளியிலும் ஊனமுற்ற பிள்ளைகள் படித்துக்கொண்டிருக்கிந்தனர். அவர்களில் ஏழ்மை நிலையில் இருந்தவர்கள் பலர் உள்ளேயே இயங்கிக்கொண்டிருந்த ஒரு இல்லத்தில் தங்கியிருந்தனர்.

பள்ளி, இல்லம், உணவு விடுதி, உள்ளேயே இருந்த விளையாட்டுத்திடல் என ஊனமுற்ற பிள்ளைகள் அங்குமிங்கும் திரிந்துகொண்டிருப்பார்கள். தாங்குகட்டைகள், காலிபர்கள், மூன்று சக்கரசைக்கிள்கள், வீல்சேர்கள் என கருவிகள் உதவியோடு அவர்கள் இயங்குவார்கள். சிலர் அதையும் பயன்படுத்தமுடியாமல் இன்னும் மோசமான நிலையிலும் இருப்பார்கள்.

துவக்கத்தில் அவர்களை காணும்போது மனதுக்கு மிகவும் வருத்தமாக இருக்கும் ஓடிச்சென்று உதவுவேன். ஒரு நாள் இதைக்கண்ட நிறுவனர் என்னை அழைத்து ‘உதவி தேவைப்படாமல் யாருக்கும் உதவவேண்டிய அவசியமில்லை, தேவையெனில் அவர்களே அழைப்பார்கள். அதுவரை நீங்கள் உங்கள் வேலையைக் கவனிக்கலாம்’ என்று கண்டிப்பான குரலில் சொல்லிவிட்டார். முதலில் கொஞ்சம் அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் இருந்தது. நல்ல நிலையில் உள்ள குழந்தைகளும், சிறிதளவு பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளும் அவர்களுடன் எப்படிப் பழக கற்பிக்கப்படுகிறார்கள் என்றும் ஒருவருக்கொருவர் எந்தச்சூழலில் எவ்வாறான உதவிகளைச் செய்துகொள்கிறார்கள் என்பதையும் அனுபவத்தாலறிந்தேன். நாளடைவில் அவர்களது நிஜமான தேவை என்ன என்பது புரியத்துவங்கியது. அந்தக்குழந்தைகளில் பலரோடு அவர்களது விளையாட்டு நேரங்களில் நட்புடன் பழகத்துவங்கினேன். அது ஓர் அனுபவம்.

இப்போது இங்கே சென்னையில் ஓர் அனுபவம். எங்கள் தெருவுக்குப் பக்கத்துத் தெருவில் ஒரு அழகிய பெண்குழந்தை ஒருத்தி இருக்கிறாள். அவளுக்கு 10 வயதிருக்கலாம். அவளது கால்கள் இரண்டும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பெரிய சைஸ் காலிபர்கள் மட்டுமல்லாமல் இரண்டு கைகளிலும் இரண்டு வீல்கள் பொருத்திய பாலன்ஸர்கள் கொண்டு தெருவில் நடைபயிலுவாள். மாலை நேரங்களில் இந்தக்காட்சியைக் காணலாம். நடக்கும் போது ஒவ்வொரு அடியையும் கால்களும், கைகளும் மிகுந்த நடுக்கத்துடனும் சிரமத்துடனும் எடுத்து வைக்கும். அவளது தந்தை மிகுந்த கண்டிப்பான முகத்துடன் ‘உம்.. ஆகட்டும்’ என சுடு சொற்களைச் சொன்னவாறே உடன் நடப்பார்.

இளகிய மனம் கொண்டவர்கள் இந்தக்காட்சியை கண்டுவிட்டு உள்ளுக்குள் அழாமல் தாண்டிச் சென்றுவிடமுடியாது. உண்மையில் பயிற்சி செய்ய அடம்பிடிக்கும் அந்தக்குழந்தையின் எதிர்காலம் கருதியே அந்தத் தந்தை அவ்வாறு செய்துகொண்டிருக்கக்கூடும். இப்படிக் கடும் பயிற்சி மேற்கொள்வதால் அவள் நாளை வெறும் காலிபர்களுடனோ, சிறிய சப்போர்ட்டினுடனோ நடக்க நேரலாம். ஆனால் பயிற்சி இல்லாவிட்டால் அவள் தவழ்ந்து மட்டுமே செல்லக்கூடிய நிலைக்குத் தள்ளப்படுவாள் என்பது நிச்சயம்.

எனக்கு இவற்றைப் பார்த்துப் பழக்கமிருப்பதால் அவள் என்னைப்பார்க்கும் சமயங்களில் சிறிது சிநேகமாய் புன்னகைத்துவிட்டுச் சென்றுவிடுவேன், அவ்வளவுதான். ஆனாலும் உள்ளுக்குள் ஏராளமான குழப்பங்கள் வந்து அலைக்கழிக்கும். இதே என் குழந்தைக்கோ, உறவினர் குழந்தைகளுக்கோ நேர்ந்தால் நான் எவ்வளவு மனமொடிந்துபோவேன்.? ஏன் இந்தக்குழந்தைகள் தன் பால்யத்தை பிறரைப்போல வாழ இயலாமல் கழிக்கின்றன.? வாழும் காலமுழுதும் இந்தப் போராட்டம் அவர்களுக்கு ஏன்.?

காது கேட்காத, வாய் பேச இயலாதவர்கள் ஒரு மொழியை அறிந்திருக்கவில்லை, அவ்வளவுதான். கண்கள் இல்லாதவர்களுக்கு குரல்களால் ஆனது உலகம். கை, கால்கள் பழுதுபட்டவர்களும் அவர்களைப்போலத்தான். நார்மலான நம்மால் இயலாத காரியங்கள் எத்தனையோ உள்ளன, அதைப்போலவே மற்றுமொரு காரியம் அவர்களால் இயலவில்லை, அவ்வளவுதான். உலகமும், வாழ்க்கையும் அனைவருக்கும் பொதுவானதே..

..என்று அறிவு சொல்கிறது. உணர்வுகளால் முடியவில்லை. என்ன மாதிரியான டிஸைன் இது.?

.

சக பதிவர் நண்பர் கேபிள் சங்கரின் தந்தையார் இன்று காலை இயற்கை எய்தினார். எவ்வயதினருக்கும் தந்தையாரின் மறைவு என்பது ஒரு பொறுத்துக்கொள்ள இயலாத பெருந்துன்பம்.


நண்பரும் குடும்பத்தினரும் துன்பத்திலிருந்து விரைந்து மீண்டு வரவேண்டும் என்பது நம் அனைவரின் விருப்பம். அவர்களுக்கு அந்த மனவலிமை கிடைக்கட்டும்.

நீங்கிச்சென்றவருக்கு நம் மலரஞ்சலிகள்.!

********************

மேற்குறித்த காரணத்தாலும், சில நாட்களாக உறங்கிக்கிடந்த மழை மீண்டும் இன்று வீறுகொண்டுள்ளதாலும் தள்ளிவைக்கப்பட்ட 'சென்னை பதிவர் சந்திப்பு' இரண்டாவது முறையாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

.

சமீபத்தில் பிரபல பதிவர் அனுஜன்யாவுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது இந்த ஃபாலோயர்ஸ் பற்றி பேச்சு வந்தது. 'என்ன அங்கிள், நம்ப கூட வந்த எல்லோரும் 500ஐத் தாண்டி போய்க்கிட்டிருக்காங்க.. நம்ப இந்த ஸ்பீட்ல போனா எப்ப அவுங்களைத் தொடுறது?' எனக்கேட்டேன்.

அதற்கு இப்படிச்சொன்னார், "இந்த ஃபாலோயர்ஸ்னால என்ன பிரயோஜன்ம்ங்கிற நீ? ஊஹூம், நோ யூஸ்.!, ஃபாலோ பண்றவங்க எல்லோருமே பதிவு படிக்கிறதில்ல.. அப்புறம், குவாலிடியா எழுதுறவங்களுக்கு ஃபாலோயர்ஸ் கம்மியாத்தான் இருப்பாங்க, பாரு.. இப்ப நாம இல்லையா?"

அதற்கு நானும் உடனடியா மண்டையை ஆட்டிக்கொண்டு சொன்னேன், "ஆமா அங்கிள், ஆமா".

அன்றைக்குத்தான் பரிசலின் சமீபத்திய பதிவில் இப்படி ஒரு பின்னூட்டம் போட்டேன்..

தமிழ்ப் பதிவுலகில் முதல்முறையாக (சரி, இவ்வளவு விரைவாக-ன்னு ஒரு வார்த்தை சேர்த்துக்கறேன்) 500 ஃபாலோயர்களை தொட்டுக்கொண்டிருக்கும் பரிசல்காரனுக்கு என் முதல் வாழ்த்துகளை பதிவுசெய்கிறேன். வாழ்த்துகள் பரிசல்.!

(அனுஜன்யா : அதோ அந்த உச்சாணிக்கிளையில் நமக்கு எட்டாம தொங்குது பாருங்க அந்த திராட்சைப்பழம். அது பயங்கரமா புளிச்சுக்கொடுவும்..
ஆதி, மகேஷ் (கோரஸாக) : ஆமா அங்கிள், ஆமா.!!)

**********

குறிப்பாக ஆங்கிலத்திரைப்படங்கள் மற்றும் விடியோ கேம்களில் சிறப்பாக பயன்படுத்தப்படும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், அனிமேஷன், கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் போன்றவற்றை ஒரு தொழில்நுட்ப மேதைமை என்று மட்டுமே பார்க்காமல் மிகச்சிறப்பான கலைவடிவமாக‌வும் நான் காண்கிறேன். அது போன்ற படங்களை ஃபிரேம் பை ஃபிரேம் நான் ரசித்துப் பார்ப்பதுண்டு.

இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பான உலக சினிமாக்களைப் பற்றி தமிழ் எழுத்துகள் பேசத்துவங்கியுள்ளன. இந்நிலையில் இது போன்ற படங்களைப்பற்றிய கட்டுரைகள் தமிழில் இல்லை என அடித்துச்சொல்லிவிடலாம். முழுமையாக இதுபோன்ற படங்களைப்பற்றி என்று இல்லாவிட்டாலும் தொடர்புடைய முக்கிய பகுதியான 'டிஸ்னி (Disney)' மற்றும் 'பிக்ஸார் (Pixar)' நிறுவனங்கள் இந்த அனிமேஷன் துறையில் எப்படி துவக்க சவால்களை சந்தித்து இன்று கோலோச்சிக் கொண்டிருக்கின்றன என்ற பெரும் வரலாற்றினை சுருக்கமான, சுவாரசியமான எழுத்தில் முக்கிய குறும்பட இணைப்புகளோடு கூடிய ஒரு கட்டுரைத்தொடராக‌ ஒரு வலைப்பூவில் கண்டேன்.


அது, நண்பர் ஹாலிவுட் பாலா எழுதிய 'தி பிக்ஸார் ஸ்டோரி'. நன்றி மற்றும் வாழ்த்துகள் பாலா.

**********

நீண்ட நாட்களாகவே எனக்கு இந்தப்பதிவுலகம் குறித்து ஒரு ஆதங்கம் உண்டு. அது இந்தப் புனைபெயர் சூடிக்கொள்வது குறித்தது. வித்தியாசமாக வைத்துக்கொள்கிறேன் பேர்வழி என்று 'நீயும் நானும் ஊருக்குப்போனோம்', 'லட்டு தின்னலாமா', 'கொத்தும் கோழி', வால் முளைத்த வண்டு' 'உடைந்த முட்டை' என ரொம்பவும் படுத்தலாக வைத்துக்கொள்கிறார்கள். (இந்த உதாரணப்பெயர்களை(??) சொல்லவும் கூட பயமாக இருக்கிறது, யாராவது வைத்துக்கொண்டிருப்பார்களோ என)

நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் உங்களுக்கு ஓரளவு சொல்லிக்கொள்ளும்படி எழுதுவதோ, பத்திரிகை முயற்சிகளோ நோக்கமில்லாமல், பொழுதுபோக்கு மட்டுமே குறிக்கோளாக இருக்கலாம். அதில் தவறில்லை. ஆனால் உங்கள் கருத்துகளை பொருட்படுத்த அல்லது உங்களை யாராவது குறிப்பிட்டு பேச விரும்பினால் எழும் சிறிய சங்கடத்தை நினைத்துப்பார்க்கலாம்.

சமீபத்திய உதாரணமாக, நண்பர் மாதவராஜின் ஒரு பதிவில் நண்பர் 'நிகழ்காலத்தில்' ஒரு பின்னூட்டம் இடுகிறார். அவர் கருத்தை ஏற்ற மாதவராஜ் பதிவிலும் மாற்றம் செய்து பின்னூட்டத்திலும் பதில் கருத்து தெரிவிக்கிறார். நானாக இருந்தால் எப்படி எழுதியிருக்கக்கூடும்?

எதிர்காலத்தில் பதிவெழுதுகையில் நிகழ்காலத்திலின் கருத்துகளை கவனத்தில் கொள்கிறேன். நன்றி நிகழ்காலத்தில்.!

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பதற்கேற்ப நல்ல படைப்புகளை நாளை நாம் தரும் சூழல் நேரும் என்ற நம்பிக்கையுடன் அழகான பெயர்களை சூடிக்கொள்ளுங்கள். தமிழிலா அழகுப்பெயர்களுக்குப் பஞ்சம்? இது என் வேண்டுகோள் மட்டுமே. மாற்றுக்கருத்து இருப்பின் மன்னியுங்கள்.

**********

சமயங்களில் சில நல்ல பதிவுகள், நம்மை அது சொன்ன விஷயங்களையும் தாண்டி சிந்தனையில் ஆழ்த்திவிடுகின்றன. ஒரு சமூக அக்கறை கொண்ட போராட்ட வாழ்வு வாழ்ந்து மறைந்த ஒரு பெரியவரை நினைவு கூறும் நண்பர் எம்.எம்.அப்துல்லாவின் சமீபத்திய இந்தப்பதிவு, பதிவு சொன்ன விஷயங்களையும் தாண்டி என்னை நாள் முழுதும் ஆக்ரமித்திருந்தது.

'போராட்டமேயில்லாத சுக வாழ்வு வாழும் நீ, உன்னைச்சுற்றி நிகழும் அநீதிகளுக்கு எதிராக ஒரு சிறு துரும்பையேனும் கிள்ளிப்போட்டிருக்கிறாயா.? உனக்கெல்லாம் இருப்பதற்குப்பெயர் சமூகக்கோபமா? அப்படியொன்று உனக்கிருக்க ஏதேனும் தகுதியிருக்கிறதா உனக்கு? முதுகெலும்பு என்று ஒன்று உனக்கிருப்பதை நீ அறிவாயா?'

வெட்கம் பிடுங்கித்தின்ன மனசாட்சி இன்னும் கேட்டுக்கொண்டேயிருக்கிறது என்னை. பதிவுகள் ரசனை சார்ந்தவை மட்டுமல்ல.. சிந்தனைகளையும், வாழ்க்கை முறைமைகளையும் மாற்றும் சக்தி வாய்ந்தவை என்பது இன்னுமொருமுறை விளங்கியது எனக்கு.

**********

அப்புறம், தமிழில் பிழைகள்.

எழுத்துப்பிழைகள், இலக்கணப்பிழைகள் என பிழைகளின் கூடாரம் இந்தப்பதிவுலகம். (இதைச்சொல்வதில் எனக்கு எந்தத்தயக்கமுமில்லை). என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்.

பிழையை அறியாமலிருந்தால் அவமானம். அறிந்தும் செய்தால் (கவனக்குறைவாக.. டைப்பிங் எரர்) அயோக்கியத்தனம். கருத்துக்கள், சிந்தனைகளை முன்னெடுத்துச்செல்லும் அதே நேரம் ஈரிழைப்பின்னலாக மொழியையும் முன்னெடுத்துச் செல்லவேண்டிய அவசியமும் பொறுப்புமிருக்கிறது நமக்கு. பிழைகள் களைய முயல்வோம்.

ஆர்வமிருப்பின் ஒற்றுப்பிழைகள் குறித்த நண்பர் கேவிஆரின் பதிவு மற்றும் தொடர்புடைய சுட்டிகளுக்குச் செல்லுங்கள்.

**********

அப்புறம் எழுத்தில் கண்ணியம்.

மொத்த மக்கள்தொகையில் 0.01 சதவீதத்துக்கும் குறைவான கூட்டமே பதிவுலகம். மொழி சார்ந்த கலை, இலக்கிய பங்களிப்புகளைச் செய்வதோடு மட்டுமல்லாமல் உறங்கும் ஊடகங்கள் சொல்லாத, தயங்கும் எழுத்தாளர்கள் பேசாத பல சமூக, அரசியல் விஷயங்களை, கருத்துகளை, செய்திகளை.. சிந்திக்கவும், உரையாடவும், பரப்பவும் கிடைத்த அறிவியல் அற்புதமே இந்தப்பதிவுலகம். இந்தச்சிறிய சதவீதம் படித்தது, அறிவார்ந்தது, வசதியானது, தொழில்நுட்பம் அறிந்தது. ஆனால் இவைதான் எந்தப்பாமரருக்கும் குறைவில்லாத, பேசப்படுகிற கருத்தை ஒட்டியதாக இல்லாத, மேம்போக்குத்தனமான, கண்ணியமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறது.

நண்பர் ஜீவனின் சமூக அக்கறையுள்ள இந்தப்பதிவில் நண்பர் ரோஸ்விக்கின் பின்னூட்டம் ஒரு உதாரணம் மட்டுமே. தமிழக முதல்வர் குறித்த ஆதாரமற்ற வெற்றுக்கூச்சல். ஊழல், சுயலாபம், பொறுப்பின்மை அனைத்தையும் கண்டிக்கிற உரிமை நமக்கிருக்கிறது. ஆனால் அது நம்பகத்தன்மையுள்ள செய்தியின் மீதான விமர்சனமாக‌ இருக்கவேண்டும், கருத்துப்பொதிந்ததாக இருக்கவேண்டும்.

பல லட்சம் மக்களின் அபிமானம் பெற்ற தலைவர்களை.. அது கலைஞரோ, ஜெயலலிதாவோ, ராமதாஸோ.. கண்ணியமற்ற முறையில் விமர்சிப்போமானால் நமக்கும் அவர்களின் தேர்தல் நேர மேடைப்பேச்சாளர்களுக்கும் எந்த வித்தியாசமும் இருக்கப்போவதில்லை.

**********

தோழி ஸ்ரீமதி மற்றும் நண்ப‌ர் முரளிகுமார் பத்மநாபன் இருவரும் 'Scrumptiuos blog (ருசிகர வலைப்பூ)' என்றொரு விருதை நம் புலம்பல்களுக்கு வழங்கியுள்ளார்கள். இருவருக்கும் என் நன்றி.


இந்த விருதை

கேவிஆர் ட்ரூத் சின்னஅம்மிணி அப்பாவிமுரு அறிவிலி

ஆகியோருக்கு வழங்கி மகிழ்கிறேன்.

**********

சென்ற வாரம் மழையினால் ஒத்திவைக்கப்பட்ட பதிவர் சந்திப்பு இந்த சனிக்கிழமை நிச்சயமாக நடக்கவிருக்கிறது. வாய்ப்பிருக்கும் அனைவரும் கலந்துகொள்ளுங்கள், சந்திக்கலாம். குறிப்பாக நான், பதிவர்களுக்கு எல்லா பதிப்பகங்களும் சலுகை விலையில் புத்தகங்கள் தந்தாக வேண்டும் என்று ஏதாவது தனிநபர் தீர்மானம் போடலாம் என்றிருக்கிறேன்.. ஹிஹி.!

விபரங்களுக்கு படத்தை சொடுக்கி பெரிதாக்குங்கள்.
.