நான் எழுந்திருக்க மாட்டேன் என்றே சனிக்கிழமை இரவு மட்டும் செல்போனை எடுத்து படுக்கையிலிருந்து தூரமாய் ஷெல்பில் வைத்துவிடுகிறாள் நந்தினி. அதுவும் நாள் தவறாது காலை 5.30 க்கெல்லாம் சரியாக அலாரம் அடித்துத் தொலைக்கிறது. அதை அணைத்துத் தொலைப்பதற்கென்றே எழ வேண்டியதாகப் போய்விடுகிறது.
‘ஆஃபீஸ் கூட லீவு விடறான். ஞாயிற்றுக்கிழமைதானேம்மா வாக்கிங்குக்கும் வாரம் ஒரு நாள் லீவு விடக்கூடாதா’ன்னா காதில் விழாத மாதிரியே போய்விடுவாள். அது சரி, இவள் விட்டாலும் கீழ் வீட்டில் உள்ள ரமணன் விட்டால்தானே ஆச்சு? 5.45 க்கெல்லாம் கீழே வரவில்லையென்றால் அவரே மேலே வந்துவிடுவார். மனிதனுக்கு காலங்கார்த்தாலே என்னைத் தொல்லை செய்யவில்லை என்றால் அன்றிரவு தூக்கமே வராது போல. சொல்லப்போனால் இந்த வாக்கிங் பிரச்சினையெல்லாம் அவராலே வந்ததுதான்.
நந்தினியைப் பார்த்தேன். ‘எழுந்து காபியாவது போட்டுக்குடும்மா, ரிடர்ன் வர்றதுக்குள்ள வயிற்றைப் பிசையும்டி..’ என்ற என் புலம்பலைக் கேட்காமல், ‘மற்ற நாள்தான் படுத்தறீங்க, ஞாயித்துக் கிழமையாவது தூங்கவிடுங்க..’ என்று இழுத்துப் போர்த்திக்கொண்டாள். முகம் கழுவி ரெடியாகி ஷூக்களைப் போட்டுக் கொண்டிருக்கும்போதே மேலே படிகளில் ஏறி வந்தபடியே.. ரமணனின், ‘லோகேஷ்’ என்ற சத்தம் கேட்டது.
‘அதான் வந்துட்டனே, அதுக்குள்ள வந்துடுவீங்களே.. இறங்குங்க போலாம்..’
இருவரும் கீழே இறங்கினோம். நாங்கள் இருப்பது அழகிய காம்பவுண்ட் சுவற்றுடன் கூடிய தனி வீடு. இருவருமே வாடகைக்குதான் குடியிருக்கிறோம். கீழே அவரும், மாடி போர்ஷனில் நாங்களும். ரமணன் திருமங்கலத்தில் ஏதோ பாங்கில் வேலை செய்கிறார். எனது அலுவலகமோ நுங்கம்பாக்கத்தில் இருக்கிறது. அவர் என்னை விட வயதில் ஐந்தாறு வயது மூத்தவர், அன்பானவர். என்ன.. ஒரு பிரச்சினை, மனிதர் கதை சொல்ல ஆரம்பித்தால் காதில் ரத்தம் வந்துவிடும். இராமாயணம் துவங்கி, குட்டிக்கதைகளில் பயணித்து, நேற்றைய வார இதழ்க்கதைகள் வரைக்கும் பின்னு பின்னு என பின்னிவிடுவார். தமிழார்வம் மிக்கவர், அவர் மூத்த மகனுக்குக்கூட அவரது தந்தையார் பெயரான ‘வில்லாளன்’ என்ற பெயரையே வைத்திருக்கிறார். ஆனால் பழக இனிமையானவர், அவர் இல்லாவிட்டால் நானெல்லாம் எங்கே இவ்வளவு காலையில் எழுந்திருக்க? அல்லது வாக்கிங் பழக.?
கீழே வந்து மெயின் கேட்டின் பூட்டை அவர் திறக்கவுமே ஏதோ ஒரு வித்தியாசம் உறைக்க இயல்பாக அவரைக்கேட்டேன், ‘ரமணன், வில்லுவோட சைக்கிள் எங்க.? எங்காச்சும் ஃபிரண்ட் வீட்ல போட்டுட்டானா.?’ ரமணன் சட்டெனத் திரும்பி வழக்கமாக சைக்கிள் நிற்கும் இடத்தைப் பார்த்துவிட்டு என்னை நோக்கித் திரும்பினார். அவர் முகத்தில் குழப்பம். கீழே மெயின் கேட்டைத் திறந்தவுடன் ஐந்தடியில் அவர் வீட்டுக் கதவு. இடது புறம் மேலே மாடிக்கு எங்கள் போர்ஷனுக்குச் செல்வதற்கான படிக்கட்டு. வலது புறம் போர்டிகோ. அதில் அவரது காரும், முன்னதாக எனது பைக்கும் வழக்கம் போல நின்றுகொண்டிருந்தன. வாசலுக்கும், மாடிப்படிக்கும் இடைப்பட்ட இடத்தில் வழக்கமாக நிற்கும் சுவரை ஒட்டிய இடத்தில் வில்லாளனின் சைக்கிள் இப்போது இல்லை. அது ஒரு அழகிய ஹீரோ ரேஞ்சர். இரண்டு மாதங்களுக்கு முன்புதான் வில்லு, ரமணனை தொல்லை செய்து வாங்கியிருந்தான்.
வில்லுவுக்கு பக்கத்தில் நண்பர்கள் யாரும் இல்லை, மேலும் எங்கள் இருவருக்குமே நேற்று மாலை அங்கே சைக்கிளை பார்த்த ஒரு ஞாபகம். பின்னர் வரிசையாக நிகழ்ந்தன இவை. வில்லாளனை எழுப்பினோம். கேட்டோம். முதலில் விழித்தவன் பின்னர் ‘அப்பா.. என் சைக்கிள்’ என்று அழத்துவங்கினான். வில்லுவின் அம்மா எழுந்து வந்தார். நந்தினி எழுந்து வந்தாள். சரிதான், சைக்கிள் இரவில் திருடு போய்விட்டது. யாரோ இரவில் மார்பளவு இருக்கும் இந்த சுவர் ஏறிக்குதித்து தூக்கிப் போய்விட்டனர். எல்லோரையும் விட வில்லு கலங்கிப் போய்விட்டான். அழுகை அவன் கண்களை முட்டியது. ஆசை ஆசையாய் அவன் வாங்கியது. மாலை நேரங்களில் ஒரு பறவையைப்போல அதில் அவன் வலம் வருவான். அவன் துக்கம் என்னை மிகவும் பாதித்தது. இந்த பிரச்சினையில் எங்கள் அன்றைய வாக்கிங் தடைபட்டது. பத்து மணிக்கு மேல் நானும் ரமணனும் போய் பக்கத்து காவல் நிலையத்தில் புகார் செய்வதாய் முடிவு செய்தோம். முதலில் சைக்கிள்தானே இதெற்கெல்லாம் புகாரா? யார் கவனிக்கப்போகிறார்கள், அவனவன் கொலை, கொள்ளைன்னு அவஸ்தைப்பட்டுக்கொண்டிருக்கிறான். இந்த சைக்கிள் மிஸ்ஸிங் கேஸை போலீசே எடுத்துக்கொள்வார்களா என்பது சந்தேகமே என்று கூறி, சைக்கிள் 5000 ரூபாய்தான், போய்த் தொலைகிறது என விட்டு விடலாமா? என்றார் ரமணன். எது எப்படி இருப்பினும், நாம் அலட்சியப்படுத்தக்கூடாது.. சைக்கிளானாலும் குற்றம் குற்றம்தான். குறைந்தபட்சம் நம்மைப் போன்றவர்கள் குற்றத்தைப்பதிவு செய்யவாவது வேண்டும்தான், அப்போதுதான் இது போன்ற சிறிய குற்றங்களின் மீதும் போலீஸ் கவனம் கொள்வார்கள் என்று நான் நியாயம் பேசியதில் ரமணன் ஒப்புக்கொண்டார்.
10.10 க்கெல்லாம் காவல் நிலையத்தின் வாசலில் இருந்தோம். வாசலிலேயே ஒரு காவலர் எங்களை மறித்தார்.
‘என்னையா விசயம்.?’
‘இல்ல சார், சைக்கிள் தொலைஞ்சுபோச்சுது, கம்ளைண்ட் குடுக்க வந்தோம்.’
‘சைக்கிளா? எங்க வச்சிருந்தீங்க.?’
‘வீட்லதான் சார்..’
‘வீட்லன்னா? வீட்டுக்குள்ள பீரோவிலயா?’
‘இல்ல சார். காம்பவுண்ட் வீடு. உள்ளதான் நிப்பாட்டியிருந்தோம்’
‘உள்ளன்னா? காம்பவுண்டுக்கு கேட்டு இருக்கா? காம்பவுண்டுன்னா என்ன பெரிய கோட்டையா.? அதப் பூட்டினீங்களா? வேற எதும் காணாமப் போச்சா.?’
அவருடைய பேச்சு எங்களை மிகவும் சோர்வடைய வைத்தது. சைக்கிளாம், பெரிய சைக்கிள், வந்துட்டானுங்க கம்ப்ளைண்ட் கொடுக்க என்பதைப்போல அவரது கேள்விகள் இருந்தன.
‘கேட்டு இருக்கு சார், பூட்டியிருந்தோம். கார், பைக் கூடத்தான் நிறுத்தியிருந்தோம். மத்தது ஒண்ணும் ஆவல..’
‘சரி சரி, அந்தா உக்காந்துருக்காரு பாருங்க, அவருகிட்ட கம்ளைண்ட் குடுங்க..’
அடடா, அவருகிட்டயும் இதே மாதிரி புலம்பணுமா.? இதுக்குதான் வேண்டாம்னு சொன்னேன் என்பது போல ரமணன் என்னைப் பார்த்தார். நான் அவரை கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு அவரிடம் சென்றேன். நல்லவேளை, அந்த ரைட்டர் முன்னவரைப் போலில்லாமல் கொஞ்சம் அமைதியாகக் கேட்டுக்கொண்டார். பின்னர், முகவரி, விபரம், சைக்கிள் ஃபிரேம் நம்பர் எல்லாவற்றையும் எழுதி ஒரு கம்ளைண்டாகக் கொடுக்கச் சொன்னார். வேண்டுமானால் மாலை வந்து எஃப்ஐஆர் காப்பி வாங்கிக் கொள்ளும்படியும், சைக்கிள் கிடைத்தால் சொல்லியனுப்புவோம் என்று சொன்னார். கொஞ்சம் ஆசுவாசமடைந்து, நாங்கள் கொண்டு சென்ற பேப்பரில் நானே அத்தனையையும் எழுதத் துவங்கினேன். சமீபத்தில் வாங்கிய சைக்கிளென்பதால் பில்லைப் பார்த்து ஃபிரேம் நம்பரை SMS அனுப்பும் படி அவர் மனைவிக்கு ரமணன் செல்போனில் செய்தி அனுப்பினார். அதற்குள் நான் எழுதிமுடித்து ரமணனை கையெழுத்துப் போடச்சொன்னேன். அவரும் போட்டார். பின்னர் இருவருக்கும் அலுவலக மூளை வேலை செய்ய இதை ஒரு காப்பி எடுத்துக்கொண்டு கொடுத்தால் என்ன என்று தோன்ற, அதற்குள் அந்த ரைட்டரும் டேபிளை விட்டு எழுந்து வெளியே போய்விட, நாங்களும் காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்தோம்.
அடுத்த பத்து நிமிடங்கள் காவல் நிலையத்துக்கு இடப்புறமும், வலப்புறமும் அலைந்தும் ஒரு ஜெராக்ஸ் கடையைக் காணமுடியவில்லை. இருந்த ஒரே ஒரு கடையும் அடைத்திருந்தது, ஞாயிற்றுக்கிழமையென்பதால் இருக்கலாம்.
‘அப்படியே கொடுத்திடலாம் ரமணன், காப்பி வச்சு நாம் என்ன பண்ணப்போறோம்?’ என நான் சொல்ல, ‘என்னக்கேட்டா கம்ளைண்டே கொடுக்க வேண்டாம்ப்பேன், பாத்தீங்கள்ல அங்க எப்பிடி மரியாதைன்னு.. முதல்லயே 100 ரூபாயைத் திணித்திருந்தோம்னா மரியாதையா பேசியிருப்பான்..’ என அவர் சொல்ல, நாங்கள் நடுத்தெருவில் நின்றுகொண்டிருந்தோம். ஒரு குரல் எங்களை வழி மறிக்க திரும்பினோம். காவல் நிலையத்தில் பார்த்த அதே காவலர்தான்.
‘என்னையா பண்றீங்க? கம்ளைண்ட் குடுத்தாச்சா?’
‘அதான் சார், எழுதிட்டோம். ஒரு காப்பி ஜெராக்ஸ் எடுத்துக்கலாம்னு..’
‘ஜெராக்ஸ் எடுத்து என்ன பண்ணப்போறீங்க? அது இருக்கட்டும். உங்க செல்போன் எங்க?’
ரமணன் சடாரென தன் பாண்ட், சட்டை பாக்கெட்டுகளில் துழாவ, அந்த காவலர் தன் பாக்கெட்டிலிருந்து எடுத்து ஒரு செல்போனை எடுத்து எங்கள் முன்னால் உயர்த்தி ஆட்டினார். பதினான்காயிரம் மதிப்புள்ள ரமணனின் புதிய சோனி எரிக்ஸன் மொபைல். அந்த மொபைலை என் கைகளில் திணித்துவிட்டு, என் கையிலிருந்த கம்ளைண்ட் பேப்பரை பிடுங்கிக்கொண்டு,
‘இத நான் ஃபைல் பண்ணிடுறேன். சைக்கிள் கிடைச்சா போன் பண்ணுவாங்க. முதல்ல இருக்கற பொருள்கள பத்திரமா, கவனமா வச்சுக்கங்கையா, போங்க.. போங்க..’
அலட்சியமாக ஆனால் கண்டிப்பாகச் சொல்லிவிட்டு திரும்பி காவல் நிலையத்தை நோக்கி செல்லத் துவங்கினார்.
.