கொஞ்ச நாட்களுக்கு முன்னர் பணி நிமித்தமாக ஹைதராபாத் சென்றிருந்த போது பல இடங்களில் பிரம்மாண்டமான சினிமா விளம்பர பேனர்களைக் கண்டேன். தமிழைத்தவிர வேறு மொழி ஒன்றுமே அவ்வளவாக மண்டையிலோ வாயிலோ நுழையாது நமக்கு. அதனால்தான் தமிழ்பிரியன் போன்ற பன்மொழி வித்தக நண்பர்களைக் கண்டால் பொறாமையில் உள்ளம் ததும்பும். அந்த பேனர்கள் மிகவும் வசீகரமாக, உயிரோட்டமாக இருந்தன. ‘ஆ பிச்சர்கா நாம் என்னுலு?’ என்றேன் கார் டிரைவரிடம். அவர் என்னை ஒருமாதிரியாக பார்த்துக் கொண்டே ‘அருந்ததி.. சூப்பர் ஹிட் மூவி’ என்று எக்ஸ்ட்ரா தகவலும் தந்துவிட்டு தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தார். ஏற்கனவே போஸ்டர் பார்த்து படத்துக்கு சென்று வாங்கிக் கட்டிக்கொண்ட அனுபவம் இருந்தாலும் இந்த போஸ்டர்கள் அப்படியிருக்க முடியாது என்று தோன்றியது. அது இப்போது நிஜமாகிவிட்டது.
எனக்கு ஃபேண்டசி படங்கள் என்றால் ரொம்பப் பிடிக்கும். விதம் விதமான கதைக்களங்களுடன் வரும் ஆங்கிலப்படங்களை மிக விரும்பிப் பார்ப்பேன். ‘ஜுமான்ஜி’ படம் வெளியாகியபோது அதைப்பற்றி கேள்விப்பட்டு திருநெல்வேலியிலிருந்து உறவினர்களை பார்க்கச்செல்லும் சாக்கில் மதுரை சென்று படம் பார்த்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.. சரி அருந்ததிக்கு வாருங்கள். சமீபத்தில் நாமெல்லாம் நன்கறிந்த பிரபல பதிவரும், இலக்கியவாதியுமான ஒருவரை சந்தித்தபோது ‘அருந்ததி’ படம் பற்றி சிலாகித்தார். மேலும் பலரும் கொண்டாடும் இந்தப்படம் உண்மையில் கொண்டாட்டம்தானா.? ஆம்.!
ஏற்கனவே ஆர்வமிகுதியில் இருந்த என்னை மேலும் நண்பர்கள் தூண்டிவிட்டதனால் நேற்று திருவான்மியூர் சென்றிருந்தேன் அருந்ததியைக்காண. படத்தின் கதையை இதற்குள் எல்லோருமே அறிந்திருப்பீர்கள். அறியாதவர்கள் கேபிள் சங்கரின் பதிவைக் காணலாம். துல்லியமாக அறியவிரும்புபவர்கள் உண்மைத்தமிழனின் பதிவைக் காணலாம். நாம் வேறென்ன ரசிக்கத்தகுந்த விஷயங்கள் படத்தில் இருந்தன என்பதை என் பார்வையில் பார்க்கலாம் வாருங்கள்.
என்னதான் லாஜிக் இல்லாத மறுபிறவி டுபாக்கூர் கதை என்றாலும் அதற்கென்றும் சில லாஜிக்ஸ் இருக்கின்றன. அது சில இடங்களில் மீறப்பட்டிருக்கிறது. சில காட்சிகள் நீளமாக இருப்பதாய் தோன்றுகிறது. பல காட்சிகள் பிரபல ஆங்கில, பிற படங்களில் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அளவுக்கதிகமாக படம் நிறைய ரத்தவெள்ளம். இதையெல்லாம் தவிர்த்திருந்தால் இன்னும் கொண்டாடியிருக்கலாம்.
இருப்பினும் பரபரப்பான காட்சிகள், ஒளிப்பதிவு, அனுஷ்கா, கிராஃபிக்ஸ், பின்னணி இசை, ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் என பல விஷயங்களும் படத்தைக் கொண்டாடக் காரணமாகின்றன. ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனை இருக்கலாம். எனக்கு எப்படிப்பட்ட காட்சியாயிருந்தாலும் அதில் இழையோடியிருக்கும் அழகுணர்ச்சியும் / பர்ஃபெக்ஷனும்தான் முக்கியம். அது இதில் சிறப்பாக வந்திருக்கிறது. அனுஷ்காவின் பெர்ஃபாமென்ஸும் அவரைக்காட்டும் காமிராவும் படத்தின் ஹைலைட். அனுஷ்காவின் அகன்ற விழிகள் நம்முடன் கதைபேசுகின்றன. பல காட்சிகளில் இசை உடன் சேர இந்தக்கூட்டணி நம்மை புல்லரிக்க வைக்கிறார்கள். அதிலும் ஒரு காட்சி, நல்ல மந்திரவாதியான அன்வர், அருந்ததியிடம் ‘நீ மறுபிறவி எடுத்திருக்கிறாய்’ என்று பரபரப்பாக சொல்லிக்கொண்டிருக்க அதை அருந்ததி மறுத்துக் கொண்டிருக்க அதை நிரூபிக்க பேசிகொண்டே அங்கிருந்த ஒரு வாளை எடுத்து அருந்ததியை நோக்கி வீசுகிறார் அன்வர். அப்போது பின்னணி இசை அலற, காமிரா பரபரப்பாக பாய.. நாம் சீட் நுனிக்கே வந்துவிடுகிறோம். அப்போது ‘அருந்ததி’ அந்த வாளை பிடித்து விட்டு ஒரு போஸ் கொடுக்கிறார் பாருங்கள்.. அடடா.. (ஒரு விநாடி நம் மொக்கை ஹீரோக்களை மனதுக்குள் நினைத்துக்கொள்கிறேன். அடப்பாவிகளா.. உங்களை என்ன கலைப்படங்களா எடுக்கச் சொல்கிறோம்? இந்த மாதிரியாவது பண்ணுங்ககளேன்னுதானே சொல்கிறோம்) என்ன அழகு.. என்ன வீரம்.! பின்னர் வில்லனை சிறைபிடிக்கையில் வரும் நாட்டியத்தில் கால்கள் தரையில் பாவாமல் அவர் தரும் அற்புதமான மனதை மயக்கும் காட்சிக்கோவைகள்.
அதே போல கிளைமாக்ஸில் வில்லனை வதம் செய்கையில் அனுஷ்காவின் ஆவேசமான முகம் என்றென்றைக்கும் என் மனதில் நிற்கும். அந்த ஸ்டில்லை உங்களுக்காக நெட்டில் தேடிப்பார்த்த போது கிடைக்கவில்லை. அதற்கு மிக அருகில் இருக்கும் ஒரு காட்சியை தந்திருக்கிறேன். சில இடங்களில் குறிப்பாக பாடல்காட்சிகளில் மொழி படுத்துவதால் படம் தெலுங்கில் இன்னும் கனஜோராக இருந்திருக்கும் என எண்ணுகிறேன். காதுல பூதான்.. ஆனால் மறக்க இயலாத பாட்டிக்கதை.! எதுக்கும் ஜாக்கிரதையாக மாட்னி ஷோ பாருங்கள். இரவுக்காட்சியென்றால் ஜக்கம்மா கனவில் வரக்கூடும்.
.
