சாமித்துரை, மூன்றாவது ரவுண்டைக் கையில் எடுத்தபோது நேரம் மாலை 7 மணி. அவன் கண்களில் வெறுப்பு பொங்கி வழிந்துகொண்டிருந்தது.
செம்பா அன்போடு கேட்டான், "போதும்டா, வீட்டுக்கு போவேண்டாமா? இதுக்கு மேலன்னா அம்மா கண்டுபிடிச்சிருவா"
"இல்ல மாமா, நா இன்னிக்கி கடைலயே படுத்துக்கிடுதேன்"
செம்பா உண்மையில் சாமித்துரையின் மாமா அல்ல. நண்பன். அவர்களுடன் அமர்ந்து மிக அமைதியாக மதுவருந்திக் கொண்டிருந்த மூக்காண்டியும் சேர்த்து மூவரும் அமர்ந்திருந்த இடம் மூக்காண்டிக்குச் சொந்தமான ஸ்டேஷனரி ஸ்டோர்ஸின் உட்புறம். ஷட்டர் முக்கால் பாகம் சார்த்தப்பட்டிருந்தது. ஞாயிறு ஆனதால் கடையை ஆறுமணிக்கெல்லாம் மூடிவிட்டு உட்புறமாக காரியத்தை ஆரம்பித்திருந்தார்கள்.
குற்றாலத்தில் பருவம் தீவிரமாக இருந்ததால் அன்றைய சாரல், சிறுமழையாகியிருந்தது வெளியே. ஷட்டரின் திறந்திருந்த கீழ்ப்பாகம் வழியே சாரல் உள்ளே வந்துகொண்டிருந்தது. ஷட்டருக்கு அருகேயிருந்த சில நோட்டுப்பார்சல்கள் மெலிதாக நனையத் துவங்கியிருந்தன. அதைக்கண்டதும் செம்பா மூக்காண்டியை நோக்கினான்.
"சட்டர புல்லா இழுத்துவுட்டுறவா மாப்ள.?"
நிஜத்திலும் மூக்காண்டி, செம்பாவின் சகோதரியை மணந்த மாப்பிள்ளைதான்.
"வேணாம். பொகை உள்ளயே சுத்தப்போவுது. அந்தப்பார்சல உள்ளதள்ளி இழுத்துப்போடு" இழுத்துப் போட்டுவிட்டு மீண்டும் வந்தமர்ந்து அவனது கிளாஸை கையில் எடுத்துக்கொண்டு சாமித்துரையை பார்த்தான்.
"என்னல இவ்ள டல்லா இருக்கே? ஏதா பிரச்சினையா?"
பதில் ஏதும் தோன்றாமல் சிறிது நேரம் அமைதியாக இருந்தான் சாமித்துரை. பின்னர் மெதுவாக "ரொம்ப பிரச்சின பண்றார் மாமா அவுரு, ரொம்ப கஷ்டமா இருக்கு".
மீண்டும் அனைவரிடமும் அமைதி நிலவியது. செம்பாவே அமைதியை உடைத்தான்.
"உடுறா.. அப்படி என்ன பிரச்சின பண்றாரு? ரூவா பிரச்னைதான.. பாத்துக்கலாம். எவனுக்குதான் பிரச்னை இல்ல? மாப்ளய பாரு. இப்பதான் ஏதோ கட கொஞ்சம் ஓடிட்டிருக்குது. ஆனா பாரு பஸ்ஸ்டாண்ட மாத்தப் போறானுங்களாம். இங்க ஒரு நாதி வராது. என்ன பண்றதுன்னு முழிச்சிகிட்டிருக்கான். சமாளிப்பம்டா.. என்ன ஆயிரப்போவுது? உனக்கு ரிஸல்ட் அடுத்தமாசம் வந்திரும்ல. பெங்களூர்ல எங்க மச்சான்கிட்ட சொல்லிவெச்சிருக்கேன். வேல ஒடனே கிடைச்சிரும். அப்புறம் அம்மா, அக்கா ரெண்டே பேருதான? சமாளிச்சிரலாம். அந்தாளு எப்பிடியும் போறாரு.. உட்டுத்தள்ளு. இப்ப என்ன இப்பிடி மூஞ்சிய தூக்கி வெச்சுக்கிட்டிருக்கவா இங்க உக்காந்து தண்ணியடிச்சிக்கிட்டிருக்கோம்? வேறெதுனா பேசிக்கிட்டிருப்போம். வீட்டுக்கு ராத்திரி வரமாட்டேன்னு அம்மாகிட்ட சொல்லிட்டயா? ஆமா, அந்த புள்ள போன வாரம் கடைக்கு வந்தாளாமே.. உன்னிய பாக்குணும்னு சொன்னாளாம்.. மாப்ள சொன்னான். அப்ப நா இல்ல. பாத்தியா அவள.? என்ன சொன்னா? அதப்பத்தி சொல்லு முதல்ல..
" அவள் என்று செம்பாவால் குறிப்பிடப்பட்ட பெண் சாமித்துரையுடன் ஒன்றாக படித்த லலிதா. அவளைப்பற்றிய பேச்சு வந்ததும் கொஞ்சம் ஆறுதலாக தோன்றியது சாமித்துரைக்கு. ஆனால் அதிலும் பகிர்ந்துகொள்ள மகிழ்ச்சியான செய்தி ஒன்றுமில்லை அவனிடம்.
"போ மாமா, அதிலயும் பிரச்சினதான். மூக்காண்டிண்ணே முதல்லயே சொன்னான். ஒரே வயசுப்புள்ளய பாக்காதடா பிரச்சின வரும்னு. நா கேக்கலியே.. இப்ப அவ எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்ங்கிறா? எனக்கு என்ன மாமா வயசாவுது. அடுத்த மாசம் வந்தா 21 ஆவும். வீட்டு நிலம எப்பிடியிருக்குன்னு உனக்கே தெரியும். இப்ப போயி கல்யாணம்கிறா.. கேட்டா வீட்ல மாப்பிள பாக்கிறானுங்களாம். அழுவுதா.. என்ன பண்றதுன்னே தெரியல."
இப்போது மூக்காண்டி பேசினான்.
"ஏண்டா.. நல்லது சொன்னா எவன் கேக்குறிங்க? இப்ப அந்தப்பிள்ளைக்கு என்ன வயசாவுது.? உன்னியவிட ரெண்டு மாசம் மூத்தவ.. நீ இன்னும் வேலைக்கி போயி செட்டிலாயி உக்கார அஞ்சி வருசமாவது ஆயிரும். வடகரக்காரன் இதுவரைக்கும் அவள கல்யாணம் பண்ணிக்குடுக்காததே பெரிய அதிசியம். அதுவரைக்கும் அவள வீட்ல வச்சிக்கிட்டிருப்பான்னு நினைக்கிறியா? இதென்ன மெட்றாஸா? வேலைக்கி போயிகிட்டு அதுவரைக்கும் வெயிட் பண்ணிக்கிட்டிருக்கதுக்கு. இல்ல நீதான் பசவுள்ள பார்ட்டியா? இப்பவே கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு. இங்க உன் டப்பாவே டான்ஸாடிக்கிட்டிருக்குது.. போடா போக்கத்தவனே"
"என்னண்ணே இப்பிடிச்சொல்லுத.." உடைந்த குரலில். "வாயில ஏதா வந்துரும் பாத்துக்க. ஒழுங்கா மருவாதியா சொல்லுதத கேளு. அவள அவங்கப்பன் பாக்குற மாப்பிளயக் கல்யாணம் பண்ணிக்கிட்டு போவச்சொல்லு. நீ வேலைக்கிப்போயி உருப்புடுத வழியப்பாரு.. சும்மா லவ்வு கிவ்வுன்னு இளுவிக்கிட்டிருந்தீங்கன்னா, எங்கிட்ட வராதிங்க சொல்லிப்புட்டேன்"
சாமித்துரையின் கண்கள் லேசாக பனித்தன. செம்பா, மூக்காண்டியைப் பார்த்து,
"என்ன மாப்ள சத்தம்போடுத? சின்னப் பய.. எடுத்துச்சொன்னா கேட்டுக்கிடுவான், மெதுவாச்சொல்லு. அவுனுக்குத் தெரியாதா?"
மீண்டும் அவர்களிடையே அமைதி சூழ்ந்தது.நான்கு நாட்களுக்கு முன்னர் இதே இடத்தில் கையைப்பிடித்துக்கொண்டு மௌனமாக அழுதவளின் முகம் சாமித்துரையின் நினைவில் அலைபாய்ந்தது. அவனது பனித்த கண்களிலிருந்து தளும்பி ஒரு துளி கண்ணீர் கன்னத்தில் உருண்டது.
"என்னல இது பொட்டப்புள்ள மாதிரி அழுதுக்கிட்டிருக்கான், இது சரிப்படாது. நா வீட்டுக்கு கிளம்புதேன், குமாரு வேற இல்ல இவன ஒத்தேல வெச்சிட்டு நீ போயிராத.. நீயும் இவங்கூடயே கடைல படுத்துக்கோ. பத்துமணிக்கு பாய் கடையை மூடுறதுக்கு மின்னாடி போய் சாப்பிட்டுட்டு வந்துருங்க, போம்போது சொல்லிட்டு போறேன்" என்று மூக்காண்டி, செம்பாவை நோக்கி சொல்லிக்கொண்டே கிளம்பினான்.
“இரு மாப்ள, அதுக்குள்ள கிளம்புறியே” என்று செம்பா, மூக்காண்டியை நோக்கி சொல்லிக்கொண்டிருக்கும் போதே போன் ஒலித்தது.
எடுத்துப்பேசிய மூக்காண்டி அடுத்த விநாடியே, ரிசீவரை பொத்திக்கொண்டு, சாமித்துரையை நோக்கி சைகை காட்டியவாறே மெலிதாக ‘அவுருதான்..’ என்றான். கல்லூரி விட்டால் வீடு அல்லது இந்தக்கடை இதைத்தவிர சாமித்துரை வேறெங்கும் போவதில்லை என்பதால் கடைக்கு அவனுக்கு போன் வருவது சகஜம்தான். ஆனால் வீட்டிலிருந்து போன் அவசியமில்லாமல் வராது. ரிசீவரை வாங்கி பேசினான்.
“சொல்லுங்க..” என்றும் “ம்..” என்றும் பெரும்பாலும் அமைதியாகவும் பேசிக்கொண்டிருந்தவன் முடிக்கும் போது சிறிது கோபத்துடன், “உங்களுக்கு வேறென்ன வேலை.. தாராளமா செஞ்சுக்கோங்க.. நாங்க நிம்மதியா இருப்போம்” என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.
“என்னடா என்ன சொல்லுதாரு” என்று அவனைக் கேட்டான் மூக்காண்டி.
“அவுரு கெடக்காரு விடுண்ணே, நீ கொஞ்ச நேரம் இருந்துட்டு அப்பறமா போயேன்”
மனதை மாற்றிக்கொண்ட மூக்காண்டி மீண்டும் அமர்ந்து அடுத்த ரவுண்டுக்கான தனது கிளாஸை நிரப்பத்துவங்கினான். மீண்டும் பல்வேறு விஷயங்களைப்பற்றி பேசிக் கொண்டிருந்துவிட்டு சாப்பிடுவதற்காக அவர்கள் பாய் கடைக்கு வந்த போது மணி பத்தாகியிருந்தது. தூறல் இருக்கிறதா இல்லையா என்று சொல்லமுடியாத அளவில் மிக மெலிதாக இருந்தது. நல்ல குளிரை உணரமுடிந்தது. இவர்களுக்காகவே எடுத்து வைத்திருந்த பரோட்டாக்களை காதிர்பாய் மீண்டும் கல்லில் அடுக்கி சூடுபண்ணத் துவங்கினார். அதனுடன் மட்டன் சுக்கா. சாப்பிட்டுவிட்டு மூக்காண்டி கிளம்புகையில் இருவரையும் நோக்கி,
“நா கெளம்புறண்டா.. ரொம்ப நேரம்பேசிக்கிட்டு உக்காந்துராதீங்க, போய் படுங்க. காலையில 8 மணிக்கெல்லாம் வந்துருவேன். 7 மணிக்கெல்லாம் கடை தெறந்து வைங்க, நா வந்தப்புறம் போங்க.. என்னா..” என்று கூறிவிட்டு தனது பைக்கில் கிளம்பினான்.
இருவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு ஆளுக்கொரு சிகரெட் பிடித்துவிட்டு கடைக்கு வரவும் மீண்டும் போன் ஒலிக்கவும் சரியாக இருந்தது.
இந்தமுறை போனை எடுத்த சாமித்துரை போனை வைக்கும் போது மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் பரவ செம்பாவை நோக்கினான். அவன் கேட்கும் முன்பே சொல்லத்துவங்கினான்.
“அப்பா.. மருந்தக் குடிச்சிட்டாராம்.. முத்தண்ணே போன் பண்றாரு. ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போயிட்டுருக்காங்களாம்..” விழிகள் திடுமென நீரைக் கோர்த்துக்கொண்டன.
“என்னல.. சொல்லுத.?” அதிர்ந்த செம்பா பரபரப்பானான்.
“கிளம்பு கிளம்பு.. எந்த ஆஸ்பத்திரினு கேட்டியா? மாப்ளைக்கு சொல்லணுமே, இன்னும் வீட்டுக்கு பெயிருக்கமாட்டான், அங்கன போய் போன் பண்ணிக்கிடலாம்” கடையை விறுவிறுவென பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு இருவரும் கிளம்பினர். சாமித்துரை எந்நேரமும் அழத்தயாராக இருந்தான். செம்பா வண்டியை ஸ்டார்ட் செய்துகொண்டே,
“ஒண்ணும் ஆயிருக்காது. சும்மா எதுக்கெடுத்தாலும் இளுவிக்கிட்டிருக்கக்கூடாது. என்ன வந்தாலும் பாத்துப்புடணும், தைரியமா இருலே..
” வண்டியின் பின்னால் அமர்ந்திருந்த சாமித்துரை தவறிழைத்துவிட்டோமோ என்ற குற்ற உணர்விலும், தந்தை மீதான உள்ளிருந்த பாசம் வெளியான நிலையிலும் அலைபாய்ந்து கொண்டிருந்தான். கடைசியாக தான் அப்படிப் பேசியிருக்கக்கூடாதோ? எத்தனைமுறை இப்படி மிரட்டியிருக்கிறார்.. இந்தமுறை இப்படி பண்ணிக்கொண்டுவிட்டாரே? அவர் சொல்லவந்ததை இன்னும் காதுகொடுத்து கேட்டிருக்க வேண்டுமோ? அவர் இல்லாமல் இனி என்ன செய்வது? அம்மா? அம்மாவை நினைத்துக்கொண்டதும் அழுகை பொங்கியது. அவர் செய்ததெல்லாம் மட்டும் நியாயமா? ஒன்றா இரண்டா.. ஐந்து லட்சத்துக்கு கடன் வாங்கி குடி, சீட்டாட்டம் எனத் தொலைத்தது.. கடன் தொல்லையில் மனைவி பிள்ளைகள் என்ன கதியானார்கள் என்று பார்க்காமல் ஒரு வருடம் எங்கிருக்கிறார் என்றே தெரியாமல் ஓடிப்போய் பின்னர் திரும்பி வந்தது.. இடைப்பட்ட காலத்தில் கந்தமாமா மட்டும் இல்லாமலிருந்தால் என்னவாயிருக்கும்? சாப்பாட்டுக்கே வழியில்லாமல் போயிருக்கும். செம்பாவும், மூக்காண்டியும் இல்லாமலிருந்தால் இவன் படிப்பைத்தான் முடித்திருக்க முடியுமா? அக்கா திருமணம் குறித்து கொஞ்சமும் நினைத்துப் பார்த்திருப்பாரா? எத்தனை கடன்காரர்கள் வீட்டுக்கே வந்து தெருவே கேட்கும் படி கத்தி அவமானம் செய்துவிட்டுப்போனார்கள்? இப்போது இப்படி.. என்ன செய்வது? மனம் நொந்து போயிருந்தான் சாமித்துரை. பத்தாம் வகுப்புக்கு முன்னர் இருந்த வாழ்க்கையை நினைத்துப்பார்க்கிறான். எப்படி இருந்த அப்பா.? ஏன் இந்த வாழ்க்கை இந்த நான்கு வருடங்களில் இப்படி மாறிப்போனது? அவர் செய்த தவறுகளால் மட்டும்தானா? வண்டி அரசு மருத்துவமனை நோக்கி சென்று கொண்டிருந்தது.
அதிகாலை மூன்று மணிக்கு வீட்டுக்கு அருகேயிருந்த அடைக்கப்பட்டிருந்த டீக்கடையின் வெளியில் கிடந்த பெஞ்சில் சாமித்துரை முழங்காலை மடித்து கால்களில் முகம் புதைத்து அமர்ந்திருந்தான். சாரல் இப்போது வலுக்கத்துவங்கியிருந்தது. அருகே கொஞ்சம் தள்ளி சிகரெட் புகைத்துக்கொண்டிருந்தனர் செம்பாவும், மூக்காண்டியும். அப்போது இரவு ரோந்து வந்துகொண்டிருந்த போலீஸ் ஜீப் இவர்களைக்கண்டவுடன் மெதுவாகி சாமித்துரை பக்கம் வந்து நின்றது.
அதிலிருந்த இன்ஸ்பெக்டர் அருகிருந்த கான்ஸ்டபிளிடம், ‘இந்நேரம் என்ன பண்ணிக்கிட்டிருக்கானுவோ இங்க? குடிச்சிருக்கானுவளா பாரு.. வண்டியில ஏத்து’ என்று கூறியவாறே இவனை நோக்கி,
“எலேய்.. வா இங்க..” என்றார்.
சாமித்துரை தலையை தூக்கிப்பார்த்துவிட்டு மீண்டும் தலைகவிழ்ந்தான்.
“கூப்புட்டும் உக்காந்திருக்கதப் பாத்தியா.. அவன இழுத்துட்டு வா” என்றார் இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபிளை நோக்கி. அதற்குள் ஜீப்பை நோக்கி ஓடி வந்த மூக்காண்டி இன்ஸ்பெக்டரிடம் மெதுவாக சொன்னான்.
“ஒண்ணுமில்ல சார், அவுங்கப்பா போயிட்டாங்க. பாடி வீட்டுக்குள்ளதான் இருக்குது. சொந்தக்காரங்கல்லாம் இனிமதான் வரணும். என்ன பண்றதுனு தெரியல.. அதான் வாசல்ல உக்காந்திருக்கோம்..”
மழை இன்னும் வலுக்க ஜீப் மெதுவாக நகரத்துவங்கியது. .
('உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதைப்போட்டிக்காக எழுதப்பட்டது)