படத்தில் ஹீரோ அறிமுகமாகிற ஆரம்பக்காட்சி. பலமாக சிந்தித்திருப்பார்கள் போல தோன்றுகிறது. தரையிலிருக்கும் சாக்கடை மூடியையே அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கேமெரா அந்த மூடியையே எல்லா ஆங்கிளிலும் சுற்றிவருகிறது. திடீரென மூடியை திறந்துகொண்டு ஒரு பந்தைப்போல ஹீரோ வெளியே பறந்துவருகிறார். மீண்டும் அதனுள்ளேயே விழுந்துவிடுவாரோ என்று நாம் பயந்துகொண்டிருந்தால் நல்லவேளையாக குழியிலிருந்து கொஞ்சம் தள்ளி லேண்ட் ஆகிவிடுகிறார். அது சாக்கடை குழியில்லை என்று நிரூபிப்பதற்காக ஒரு கேரக்டர் தண்ணீர் குழாயை ரிப்பேர் பார்த்தால் இப்படியல்லவா பார்க்கவேண்டும் என ஆச்சரியமாக வசனம் பேசுகிறது. இப்படியாக படம் ஆரம்பிக்கிறது.
ஒரு பெரிய வீடு. பெரிய குடும்பம். நிறைய பெண்கள். ஹீரோவைத்தவிர வேறு ஆண்கள் யாருமில்லை. இத்தனை பெண்கள் எப்படி என்றால் ஹீரோவின் அப்பாவுக்கு மூன்று மனைவிகளாம். மற்றவர்களை சகோதரிகள் என்று கொள்வோம். ஹீரோவுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. பிள்ளைகள் வேறு இருக்கிறார்கள், அவர்களை சகோதரிகளின் பிள்ளைகள் என்று கொள்வோம். ஆனால் அவர்களின் கணவர்கள் எங்கே என்று கேட்கக்கூடாது. அப்படி ஒரு கேரக்டர்கள் இருப்பதாகப் படவில்லை. ஒருவேளை தேவைப்படாமல் இருந்திருக்கலாம். நமக்கு என்ன சந்தேகம் என்றால் எந்த கேரக்டர்தான் தேவையோடு உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதுதான். ஆட்டமும் பாட்டமுமாய் சந்தோஷமான சூழ்நிலை. ஆனாலும் பணக்கஷ்டமாம். கேட்டால் அப்பா ஓடிப்போய்விட்டாராம்.
திடீரென ஒரு பேங்கிலிருந்து அப்பா கிளியரன்ஸ் க்காக போட்ட ஒரு செக் திரும்பி வருகிறது. (அப்படியானால் அவர் தொலைந்து எவ்வளவு நாட்கள் ஆகியிருக்கும் என கணக்கிட்டு வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்று பிறகு சொல்கிறேன்.)
ஹீரோ அதை வைத்துக்கொண்டு அவரது அப்பாவுக்கு பணம் தரவேண்டியவர் யார் என அறிந்து கொண்டு , மேலும் அவர் எங்கிருக்கிறார் எனவும் அறிந்துகொள்கிறார். (இதற்காக வீட்டிலிருக்கும் கம்ப்யூட்டரையும் பயன்படுத்துகிறார்). அது மலேசியாவிலிருக்கும் வில்லன்தான் என்பதால் ஒரு நண்பரையும் கூட்டிக்கொண்டு மலேசியா செல்கிறார்.
எத்தனை பேர் வில்லன்கள் என்பதையும் அவர்கள் வாழ்வது மலேசியாவிலா அல்லது ஆந்திர மாநிலம் கடப்பாவிலா என்பதையும் அறிந்துகொள்வது மிகுந்த சிரமம் என்றாலும் குறைந்தபட்சம் எத்தனை வில்லன்கள் என்பதையாவது கூற முயற்சிக்கிறேன். மலேசியாவில் ஒரு வில்லன், பெயர் எக்ஸ் என வைத்துக்கொள்ளுங்கள். அவருக்கு ஒரு மகள் (அவர்தான் ஹீரோயின் என்பதை நான் சொல்லும் முன்பே நீங்கள் யூகித்திருந்தால் மேல்கொண்டு இந்த கட்டுரையை படிக்கவேண்டிய அவசியமில்லை) . எக்ஸ்க்கு ஒய் என்று ஒரு மருமகன். ஏனென்றால் மகளை திருமணம் செய்துகொடுக்க வேண்டுமே. இருவருமே தடிமாடு மாதிரியிருந்தும் ஹீரோ அறிமுகமாகி , வந்து ஹீரோயினுக்கு அவர் மேல் ஒரு அபிப்பிராயம் வந்து பிரச்சினை வரும் வரை ஏன் மகளுக்கு கல்யாணம் செய்யாமல் வைத்திருக்கிறார்கள் இந்த வில்லன்கள் என்பது எனக்கு புரியவே மாட்டேங்கிறது. இந்த ஒய்யும் முக்கியமான வில்லன்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதுபோக கடப்பாவில் இசட் என்ற ஒரு அரசியல்வாதி இருக்கிறார். இவரும் எக்ஸ்சும் உறவினர்கள் என்பதை அறிக. யார் பெரிய வில்லன் என்பதில் அவர்களுக்குள்ளாகவே போட்டிஎன்பது ஒரு தனி சுவாரசியம். அவருக்கு ஒரு அடியாள். (என்ன அடியாளைஎல்லாம் கணக்கில் எடுக்கிறாய் என்று கோபிக்கவேண்டாம். ஏனெனில் அவர் பொறுப்பில்தான் ஒரு கல்குவாரி இருக்கிறது, அதில்தான் ஹீரோவின் அப்பா சிறைபட்டிருக்கிறார். மேலும் மெயின் வில்லன்களை எல்லாம் ஒருகட்டத்தில் துவைத்து எடுக்கும் ஹீரோ இவரிடம் ஒருமுறை நல்ல மொத்து வாங்குகிறார்).
சரி, கதைக்கு வாருங்கள். மலேசியா செல்லும் ஹீரோ ஒரு ஹோட்டலில் (அது ஹோட்டலா அல்லது வில்லனின் ஆபீசா என்பது தெரியவில்லை) ஒய் யை சந்திக்கிறார். நல்ல போதையில் இருக்கும் ஒய், செக்கை கிழித்து ஹீரோவை வெளியே துரத்திவிடுகிறார். வெளியே வந்தவுடன் நண்பருடன் கலந்து ஆலோசித்துவிட்டு (நண்பருக்கு பணத்தை வாங்கும் எண்ணமே இருப்பதாக தெரியவில்லை. எப்போ தண்ணியடிக்கலாம் என்றே அலைந்துகொண்டிருக்கிறார் ) பூவா தலையா போட்டுப்பார்த்துவிட்டு பணத்தை வாங்க நேர்மையான வழியை விட அராஜக வழியே சிறந்தது என்ற முடிவுக்கு வருகிறார். உங்களுக்கு வேறு படங்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல.
மீண்டும் ஹோட்டலுக்கு உள்ளே செல்லும் ஹீரோ இம்முறை ஒய் யையும் அடியாட்களையும் அடி அடியென்று அடித்து துவைத்துவிடுகிறார். பந்து ஒன்றை சுவருக்கும் சீலிங் கிற்கும் எத்திவிடுவதைப்போல அவர்களை பந்தாடுகிறார். (சும்மா பந்தாடுகிறார் என்றால் நீங்கள் உணரமாட்டீர்கள்) . இவ்வளவுக்கும் அடியாட்கள் துப்பாக்கிஎல்லாம் வைத்திருக்கிறார்கள். திடீரென எக்ஸ் உள்ளே வந்துவிடவும் ஹீரோ ஒரு புகை மாதிரி ஏதோ ஒன்றை கிளப்பிவிட்டுவிட்டு ஓடிவிடுகிறார். (அவரையும் அங்கேயே வைத்து அடித்திருந்தால் பிரச்சினை அங்கேயே முடிந்திருக்கும். ஏன் ஓடிவிடுகிறார் என்பது எனக்கு புரியவில்லை. இவ்வளவுக்கும் பிற்பகுதியில் ஒரே குத்துவாங்கி மரணப்படுக்கைக்கே போய்விடுகிறார் எக்ஸ்.)
இந்த இடத்தில் எக்ஸ் சைப் பற்றி ஒரு விஷயம் சொல்லிவிடுகிறேன். அவரைப் பற்றி பேசினால் டாக்சிக்காரர்கள் பணம் வாங்காமல் ஓடிவிடுகிறார்கள், மலேசியாவே அவர் பேரைக்கேட்டால் நடுங்குகிறது. அவர் பெண் ஒரு முறைகூட சென்னை வந்ததில்லை. அவர் என்னடாவென்றால் கடப்பா வந்து பார் பார்க்கலாம். அது என் கோட்டைடா என்று ஹீரோவுக்கு சவால் விடுகிறார். ஹீரோவும் சவாலை ஏற்றுக்கொண்டு கடப்பாவுக்கே போய் ஒரு குத்துவிடுகிறார். அதோடு ஐசியு வில் அட்மிட் ஆகி வீல்சேரில் வாழ்க்கை நடத்துகிறார் வில்லன். இந்த கதையை பிறகு பார்க்கலாம். மீண்டும் மலேஸியாவுக்கு வாருங்கள்.
எக்ஸ் வந்தவுடன் வெளியே ஓடி விடும் ஹீரோ எங்கு தங்குறாரோ என்ன செய்கிறாரோ தெரியாது அன்றிரவோ மறுநாள் இரவோ வில்லன் வீட்டுக்கு செல்கிறார். அங்கு ஹீரோயினுக்கும் ஒய் க்கும் நிச்சயதார்த்தம் நடக்கிறது. அப்போது வில்லன் வைரம் கடத்துவதை தெரிந்து கொண்ட ஹீரோ (யாரோ ஒருவருடன் வைர பிசினஸ் பேசிக்கொண்டிருக்கிறார் வில்லன்- அதை ஒட்டுக் கேட்டுவிடுகிறார் ஹீரோ ) பணத்தை விடவும் வைரத்தை கடத்திவிடுவது நல்லது என்ற முடிவுக்கு வந்து ஒரு வைரத்தைக் திருடிவிடுகிறார். அவ்வளவு கூட்டத்திலும் ஹீரோயினைத்தவிர யாரும் அவரைப்பார்க்கவில்லை. ஆனால் திருடுவதற்காக மாடி விட்டு மாடி குதிப்பதைப்பார்த்த பார்த்த ஹீரோயின் சாகசத்தில் மயங்கி காதலிக்கத் துவங்கிவிடுகிறார். ஆனாலும் ஐயோ பாவம் ஹீரோ திருடுவதற்காக ஒரு தொப்பியும் கண்களில் சின்னதாக ஒரு ஸ்கார்ப்பும் கட்டியிருந்ததால் ஹீரோவை ஹீரோயினுக்கு அடையாளம் தெரியாமல் போய்விடுகிறது. ஆனாலும் என்ன? காதல்தான் வந்துவிட்டதே. எப்படியோ ஹீரோவுக்கு சென்னை என்று தெரிந்துகொண்டு ஹீரோயினும் அதே பிளைட்டில் சென்னை கிளம்பிவிடுகிறார். கஸ்டம்ஸ் சில் இருந்து தப்பிக்க வைரத்தை ஹீரோயின் பைக்குள் போட்டுவிடுகிறார் ஹீரோ. ஹீரோயினை கஸ்டம்ஸ் பிடிக்காதா என்றெல்லாம் கேட்கக்கூடாது. இதன்காரணமாக சென்னை வந்தவுடன் ஹீரோயின் பின்னாலேயே சுற்றவேண்டிவருவதால் காதல் காட்சிகளுக்கு லீட் கிடைக்கிறது.
"மொழா மொழான்னு யம்மா யம்மா " -வென்று ஒரு காதல் பாடல். தமிழிசை மீது காதல் கொண்டவர்கள் பாவம். வெறிபிடித்து மனப்பிறழ்வு ஏற்படலாம். சரி மீண்டும் படத்துக்கே வருவோம்.
வைரத்தையும் காணாமல் மகளையும் காணாமல் வில்லன் எக்ஸ் சென்னை கிளம்பி நேரே ஹீரோ வீட்டுக்கு வந்துவிடுகிறார். ஒரு குழந்தையை கையில் வைத்துக்கொண்டு ஹீரோவுக்கு போன்செய்கிறார். காதல் செய்து கொண்டிருந்த ஹீரோ உணர்வு பெற்று வீட்டுக்கு திரும்புகிறார். குழந்தையை துப்பாக்கிமுனையில் பிடித்துக்கொண்டு ஹீரோவிடமிருந்து வைரத்தை வாங்கிக்கொண்டு மேலும் அவரை ஒரு லிப்ட்டில் அடைத்துவைத்து (சுற்றி படி வைத்துக்கட்டி கம்பிகளால் செய்யப்பட்ட ஒரு லிப்ட். கட்டட வேலைக்கு பயன்படுமே அதுமாதிரி. ஆனால் இந்த லிப்டை சுற்றி எந்த கட்டடிமும் இல்லை.) அவரது அப்பாவைத் தாமும் இசட் டும் சேர்ந்து கடப்பாவில் ஒரு கல் குவாரியில் அடைத்துவைத்து கொடுமைப்படுத்துவதையும் சொல்கிறார். மேலும் அவரை துப்பாக்கியால் சுடாமல் பாதுகாப்பான தூரத்திற்கு வந்து அடியாட்கள் மூலமாக லிப்டை மேலே தூக்கி பிறகு கம்பியை அறுத்து லிப்டை கீழே விழச்செய்கிர்றார். லிப்டில் மாட்டிய ஹீரோ என்ன ஆனாரோ என நாம் பதைக்கும் போது லிப்ட் நேரே பூமியைத்துளைத்துக்கொண்டு பக்கத்தில் எங்கோ ஆற்றிலோ, கடலிலோ (திருவல்லிக்கேணியில் நடப்பதால் அனேகமாக மெரீனா கடற்பகுதியாகத்தான் இருக்கவேண்டும்.) போய்ச்சேருகிறது. அப்போது லிப்ட் கதவை மிதித்து தூள் தூளாக்கி விட்டு நீந்தி வெளியே வருகிறார். (இதை ஏன் முன்பே செய்யவில்லை கேட்காதீர்கள் - லிப்ட்டை அறுத்துவிட அடியாட்களுக்கு ஆகும் நேரத்தில் சிறைக்குள் மாட்டிய சிங்கம் போல என்ன செய்வதென தெரியாமல் முழித்துக்கொண்டிருக்கிறார் ஹீரோ).
இந்த இடத்தில் ஹீரோவின் அப்பாவைப் பற்றி சொல்லியாகவேண்டும்.
அவர் பல வேலையாட்களை வைத்துக்கொண்டு, ஒரு பெரிய மெஷினையும் வைத்துக்கொண்டு ஊர் ஊராக சென்று ஆழ் கிணறு தோண்டும் வேலையை செய்பவர். அதற்காக ஒருமுறை நூற்றுக்கும் அதிகமான ஆட்களையும், குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கடப்பா செல்கிறார். (எதற்காக இவ்வளவு ஆட்கள், மற்றும் குழந்தைகள் என்பதை யாராவது சொன்னால் தேவலை.- மேலும் ஒரு கண் தெரியாத இளம்பெண் வேறு). அப்படி அவர் செல்லும் இடம் எக்ஸ் மற்றும் இசட்டினுடைய கல் குவாரி. பாறைகளை உடைத்துக்கொண்டிருக்கும் போது அந்த பாறைகள் வைரப்பாறைகள்என்று கண்டுபிடிக்கிறார். வில்லன்கள் மகிழ்ந்து கொண்டாட அவரோ இது அரசுக்கு சொந்தமானது என்று நியாயம் பேசுகிறார். உடனே வில்லன்கள் குவாரியை சுற்றி வேலி கட்டி யாரும் வெளியே போகமுடியாது எனவும், அவர்கள்தான் வைரத்தை எடுத்துத் தரவேண்டும் எனவும் கூறிவிடுகிறார்கள். மேலும் மீறினால் சுட்டுத் தள்ளிவிடுவோம் என்று கூறி துப்பாக்கியுடன் காவலுக்கு ஆள் வைக்கிறார்கள். உதாரணத்துக்கு அங்கேயே எதிர்த்துப் பேசும் சிலரை சுட்டுப் பொசுக்கி விடுகிறார்கள். அவர் சும்மா இருக்காமல் என் மகன் ஒரு நாள் வருவான். அவன் வந்து உங்களையெல்லாம் சும்மா விடமாட்டான் என்று தரையில் அடித்து சத்தியம் செய்கிறார். உடனே அவரை ஸ்பெஷலாக கவனித்து அடைத்துவைக்கிறார்கள்.
என்ன ? .. வேண்டாமா.. சரி, வேண்டாம்! நிறுத்திக் கொள்கிறேன். அவர் கடப்பா சென்று யாருக்கும் தெரியாமல் அடிமைகளோடு அடிமையாய் சேர்ந்துகொண்டது,(அப்பாவை கண்டுபிடிக்க வேண்டுமே..), அப்பாவின் உதவியாளர்களைச் சந்தித்து ஆராய்ந்து அப்பாவைக்கண்டுபிடித்தது, கல்குவாரி இன் சார்ஜ் -இடம் முதலில் மொத்து வாங்கி பின்னர் அவரை ஜெயித்து மக்களை விடுவித்தது, திருமணத்தை நிறுத்தி ஒய் -ஐ மொத்திவிட்டு ஹீரோயினை காப்பாற்றியது, எக்ஸ் -ஐ ஒரே குத்தில் படுக்கைக்கு அனுப்பியது, இசட்டை ஒழித்துக்கட்டி மேலும் அவரது தேச துரோக ரகசியங்களை லேப்டாப் மூலமாக தெரிந்துகொள்வது, இசட்ஒழிந்ததை அறிந்த எக்ஸ் படுக்கையிலிருந்து மீண்டும் எழுந்து வந்து உதைவாங்கியது, அந்த கிளைமாக்ஸ் சண்டையில் ஒரு ஐம்பது பேரை கோடரியால் வெட்டிக்கொலை செய்வது, பின்னர் வழக்கம் போல போலீஸ் வருவது,(சாதா போலீஸ் அல்ல, சிபிஐ) அந்த அதிகாரி பரவாயில்லை, கீப் இட் அப் என்று ஹீரோவின் தோளைத்தட்டிக்கொடுப்பது.. இதை எல்லாம் நீங்கள் தியேட்டரிலேயே போய் பார்த்துக்கொள்ளுங்கள். ..
பின்னே.. நான் வேண்டாம் என்று அறிவுரை சொன்னால் நீங்கள் கேட்கவா போகிறீர்கள்?
பி.கு:
இப்பேர்ப்பட்ட படத்தை தயாரித்தது கலைஞர் குடும்பத்து கலைவாரிசு என்பதை அறிக. பாவம் கலைஞர்!
எத்தனை பாலா, அமீர்கள் வந்தாலும் இந்த தரணி, பேரரசுகளை ஒண்ணும் பண்ண முடியாது என்றுதான் நினைக்கிறேன். பாவம் தமிழ் சினிமா.!



